Monday 23 December 2013

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்:-



வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.

இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும்.

மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.

ரூ.2 ஆயிரத்து 414 மதிப்பு கொண்ட அந்த பொருள்களை, 50 சதவீத மானியத்தில் ரூ.1,207-க்கு தமிழக அரசு வழங்குகிறது. ஒரே நபருக்கு 5 முறை மானிய விலையில் தோட்டம் அமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வழங்கப்படும்.

எங்கு அணுகுவது?: சென்னை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாதவரம், சென்னை - 51. தொலைபேசி: 044 - 25554443.

கோவை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், 8, தடாகம் சாலை, கோவை - 641013, தொலைபேசி: 0422 - 2453578.

www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் தாமோதரன் பேசியது:

இந்தியாவில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நகரவாசிகள், தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பெண்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார் அவர்.

மாடி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: இந்த திட்டம் சென்னை மற்றும் கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உரங்களைத் தயாரிக்க சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இங்கு உணவுக் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் என அனைத்து விதமான குப்பைகளும் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தும் என்று மேயர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு

OPERATIONAL MANUAL Of DO IT YOURSELF KIT

INPUT DETAILS OF DO IT YOURSELF KIT

DO IT YOURSELF KIT - APPLY NOW

Sunday 8 December 2013

மண் வளம் மேம்பட ....

மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.

1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

பலபயிர் வளர்ப்பு:-

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன

தானியப்பயிர் :
 
சோளம்              :-                   1 கிலோ
கம்பு                     :-                  1/2 கிலோ
தினை                  :-                 1/4 கிலோ
சாமை                 :-                  1/4 கிலோ

பயிறு வகை :

உளுந்து                                   :- 1 கிலோ
பாசிப்பயறு                            :- 1 கிலோ
தட்டைப்பயிறு                     :- 1 கிலோ
கொண்டைக்கடலை         :-1 கிலோ

பசுந்தாள் பயிர்கள் :
 
தக்கை பூண்டு                      :- 2 கிலோ
சணப்பை                                :- 2 கிலோ
நரிப்பயறு                               :- 1/2 கிலோ
கொள்ளு                                 :- 1 கிலோ

மணப்பயிர்கள்:-

கடுகு                                       :-1/2 கிலோ
வெந்தயம்                             :-1/4 கிலோ
சீரகம்                                      :-1/4 கிலோ
கொத்தமல்லி                      :- 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு உண்டானது.

Saturday 7 December 2013

அக்னி அஸ்திரம்

அக்னி அஸ்திரம் :-


































இந்த வகையான பூச்சி தாக்குதலினை எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் பயன்படுத்துதல் ஆகும்.

குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம் தெளித்ததால் கொய்யா மரம் இந்த பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.

அக்னி அஸ்திரம் என்றால் என்ன?:-
நாட்டு பசுமாட்டு சிறுநீர் புகையிலை பச்சை மிளகாய் வேம்பு இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

தயாரிக்க தேவையான பொருட்கள் :

புகையிலை:- அரை கிலோ,
பச்சை மிளகாய் :- அரை கிலோ,
வேம்பு இலை :- 5 கிலோ நாட்டு
பசுமாட்டு சிறுநீர் (கோமியம்):- 15 லிட்டர்
மண்பானை.

தயாரிக்கும் முறை:


நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில்(வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது,வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.) ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?

100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?

பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.

எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.


Sunday 1 December 2013

ஜீவாமிர்தம்...


ஜீவாமிர்தம்...

ஜீவாமிர்தம் என்றால் என்ன?

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

ஜீவாமிர்தக் கரைசல் ஓர் வளர்ச்சி ஊக்கி ஆகும். அது நுண்ணுயிர்களைப் பெருக்கும் ஓர் ஊடகம். பத்து கிலோ சாணத்தில் 3 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்கள் ஜீவாமிர்தக் கரைசலுடன் மண்ணுக்குள் செல்லும். அப்போது அவை மீண்டும் பல்கிப் பெருகும். இதன் மூலம் நிலம் வளம் பெற்று நல்ல விளைச்சலைப் பெறமுடியும். நுண்ணுயிர்களைப் பொறுத்தவரை பெருக்கம் அடைந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், மழை பெய்து நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அவை பெருக்கம் அடையாது. 

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?

தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ

நாட்டு பசுங்கோமியம்-10 லிட்டர்

வெல்லம் (கருப்பு நிறம்)-2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் ( அ ) பனம் பழம் -4

பயறு வகை மாவு - 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)

பயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட மண் கையளவு

தண்ணீர்-200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை:

தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம் ,பயறு வகை மாவு,வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும் .இதனுடன் 200 லிட்டர் தண்ணிரை சேர்த்து நிழலான இடத்தில தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும் . தினமும் 2 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும்.

பயன்படுத்தும் முறை:

ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.

ஜீவாமிர்தக் கரைசலினை நேரடியாக பயிர்களுக்குப் பயன்படுத்த கூடாது. கெட்டியான திரவ நிலையிலிருக்கும் ஜீவார்மிதக் கரைசலை தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளித்தால் இலை, தழைகளில் உள்ள துளைகள் மூடப்பட்டுவிடும். இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூச்சை நிறுத்திவிட்டு எப்படி நம்மால் உயிர் வாழ முடியாதோ அதுபோலத்தான் பயிர்களும். தாவரங்கள் இலையில் உள்ள துளைகள் மூலமாகத்தான் சுவாசிக்கும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஜீவார்மிதக் கரைசலை பயிர்களுக்கு நேரடியாக தெளிக்க கூடாது. ஜீவார்மிதக் கரைசல் 20 லிட்டர், தண்ணீர் 200 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். இப்படி செய்வதுதான் சரியான முறை.

ஜீவாமிர்தக் கரைசலைத்தொடர்ந்து பயன் படுத்தி வந்தால், நிலத்தின் நாட்டு மண்புழுக்களின்எண்ணிக்கை பெருகும். நிலத்தின் மண் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி வேலை செய்து கொண்டுள்ளன என்று பொருள்.

இயற்கை முறைகளினை பயன்படுத்துவோம்.மண் வளம் காப்போம்.

வீட்டுத்தோட்டப்பயிர்கள்

வீட்டுத்தோட்டப்பயிர்கள் :-


 வீட்டுத்தோட்டத்தில் அனைத்துவகை காய்கறிகளும் பயிரிடலாம்.இருப்பினும் காலமறிந்து நடுவது நன்மை பயக்கும் அல்லவா.

இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை :-

தக்காளி மற்றும் வெங்காயம் - ஜுன் – செப்டம்பர்
முள்ளங்கி - அக்டோபர் – நவம்பர்
பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி
வெண்டைக்காய் – மார்ச் – மே

கத்தரி - ஜுன் – செப்டம்பர்
பீன்ஸ் - அக்டோபர் – நவம்பர்

தக்காளி – ஜுன் – செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை - மே

மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர்
தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம் - மார்ச் – மே

வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – ஆகஸ்டு
முட்டைக்கோஸ் - செப்டம்பர் – டிசம்பர்
கொத்தவரை - ஜனவரி – மார்ச்

பெரிய வெங்காயம் - ஜுன் – ஆகஸ்டு
பீட்ருட் - செப்டம்பர் – நவம்பர்
தக்காளி - டிசம்பர் – மார்ச்
வெங்காயம் - ஏப்ரல் – மே


கொத்தவரை – ஜுன் – செப்டம்பர்
கத்தரி மற்றும் பீட்ருட் - அக்டோபர் – ஜனவரி

பெரிய வெங்காயம் - ஜுலை – ஆகஸ்டு
கேரட் -செப்டம்பர் – டிசம்பர்
பூசணி -ஜனவரி – மார்ச்

மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு
வெங்காயம் – ஜனவரி – ஆகஸ்டுவெண்டைக்காய் – செப்டம்பர் – டிசம்பர்
கொத்தமல்லி – ஏப்ரல் – மே


இந்த முறையில் பயிரிடுவது மலைப்பகுதிகளுக்கு ஏற்றது அல்ல என்பதினை நினைவில் கொள்ளவேண்டும்.

வீட்டுத்தோட்டத்தின் அருகில் இருக்கும் இடங்களில் கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்ற குறுகிய கால பயிர்களினை நடலாம்.இது மிக பலன்கொடுக்க கூடியது

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யலாம்.

பலவருட பயிர்கள் தொடர்ந்து பயன் தரும். அவை
முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.