Monday 25 August 2014

ஏரோபோனிக்ஸ்

ஏரோபோனிக்ஸ்
ஏரோபோனிக்ஸ் என்கிற முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழு வதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்து விட்டால் செடிகள் ஜோராக வளரும்.

மண்ணில்லாத கோபுர விவசாயத்தில், 15 நாட்களில் 30 டன் தக்காளி அறுவடை செய்யும் முறையை கண்டுபிடித்துள் ளார், கோவை வேளாண் பட்டதாரி வாலிபர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் பிரபுசங்கர்(41). வேளாண் பொறியியல் பட்டதாரியான இவர் புனே வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக நவீன விவசாய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறைந்த பரப்பளவில் பயிர்சாகுபடி செய்து லாபம் ஈட்ட வேண்டுமென்பதில் முனைப்புடன் செயல்பட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் உதவியுடன் ஏரோபோனிக்ஸ் முறையில் கோபுர விவசாயம் (மண்ணில்லாத விவசாயம்) என்ற நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு வருகிறார். இதன்மூலம் ஆண்டு முழுவதும் எந்த சீதோஷ்ண நிலையிலும் எல்லா வகை காய்கறிகளையும் விளைவிக்க முடியும் என்கிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை கிராமத்தில் இம்முறையில் தக்காளி சாகுபடி செய்துள்ள இவர் மேலும் கூறியதாவது: ஒரு ஏக்கர் நிலத்தில் வழக்கமாக 5 ஆயிரம் தக்காளி நாற்றுக்கள் மட்டுமே நடவு செய்ய முடியும். 

ஆனால் இப்புதிய தொழில்நுட்பத்தில் கால் ஏக்கர் பரப்பளவில் 10ஆயிரம் தக்காளி நாற்றுக்கள் நடவு செய்யலாம். பிவிசி பைப் அல்லது காற்று புகாத குழாய்களில் அடுக்கடுக்காக தக்காளி நாற்றுக்கள் நடவுசெய்யப்படுகிறது. ஏசி, ஏர்கூலர், காற்று, தண்ணீர் இரண்டையும் கலந்து தெளிக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறுவகை சாதனங்கள் இம்முறை விவசாயத்திற்கு தேவைப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண தக்காளி 100 நாட்களில் பலன் தரத்தொடங்குகிறது. ஆனால் இம்முறையில் 45 நாட்களிலேயே பலன் கிடைக்கும். 15 நாட்களில் 30 டன் தக்காளி அறுவடை செய்யப்பட்டுவிடுகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு 6 முறை தக்காளி சாகுபடி செய்யமுடியும். 

கால் ஏக்கரில் ஒரு ஆண்டுக்கு 150 டன் தக்காளி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் செடிக்கு 500 லிட்டர் நீர்மட்டுமே செலவாகிறது. ஒரு முறை செலவழித்து 15 ஆண்டுகள் வரை இதில் பயிர் செய்து பலன் பெறலாம். கீரை முதல் அனைத்து வகை காய்கறிகளையும் இதில் சாகுபடி செய்யலாம்.

Saturday 26 July 2014

composter


composter


City-based EcoTec Engineers and Consultants, which designs environment-friendly and ecologically safe spaces, has introduced a composter. The new composter is designed for small spaces and apartments. It makes composting even and much faster, and could be the solution for urbans spaces.
The composter, which comes in single and dual options, uses a batch composting method and promises volume reduction of 90 per cent in every batch.
The tumbling composter is priced at Rs. 11,440 and the dual tumbling composter at Rs. 14,495. For more details, contact suresh@ecotec.in.

Thursday 5 June 2014

உலக சுற்றுச்சூழல் தினம்


1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல' என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. 

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.(நன்றி தினகரன்)

     இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

      நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

    மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

    மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

          வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

       வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.

       இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சுற்றுச்சுழலை பாதுகாப்போம்..எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களினை விட்டுச்செல்வோம் என இந்த நாளில் சூளுரைப்போம்.

Sunday 13 April 2014

முள் இல்லாத மூங்கில் - ஓர் பார்வை


முள் இல்லாத மூங்கில்


ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை உயரம் வளரக்கூடிய மூங்கில் மற்ற மர வகைகளிலிருந்து வேறுபட்ட ஒரு தொடர் பயிராகும். முள், முள்ளில்லா மூங்கில்கள் என இருவகை மூங்கில் வகைகள் உள்ளன. மூங்கில் கூடை, ஏணி, தட்டி போன்ற பொருட்கள் செய்வதற்கு பயன்பட்டாலும் இன்றைய காலல கட்டத்தில் இவை பல மதிப்பூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதிக லாபம் ஈட்டும் பயிராக விளங்குகிறது. இன்றைய கால கட்டத்தில் மூங்கில் காகிதங்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கும், மின் சக்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மூங்கில் கரி பல பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.தமிழ்நாட்டில் இரண்டு மூங்கில் வகைகள் மிக அதிக அளவு பரப்பளவில் சாகுபடிச் செய்யப்படுகின்றன. அவை மிதமான வறண்ட பகுதிகளில் வளரும் கல் மூங்கில், ஈர செழிப்புள்ள பகுதியில் வளரும் முள்மூங்கில் (அல்லது) பொந்து மூங்கில் ஆகும். இவை தவிர இன்றைய கால கட்டத்தில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து, அதிக லாபம் தரக்கூடிய புதிய முள்ளில்லா மூங்கில் ரகங்களாகிய பாம்பூசா வல்காரிஸ் மற்றும் பாம்பூசா பல்கோவா போன்ற மூங்கில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.மூங்கில் ஒரு மரவகைப் புல். இது தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படும். உலகளவில் 1250 வகைகள்உள்ளன. இந்தியாவில் 23 ரகத்தில் 125 பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் மொத்த மூங்கில் காடு பரப்பளவு10.03 மில்லியன் ஹெக்டர் ஆகும். இது12.8 சதவிகிதம் தான். அதிகமாக மூங்கில்கள் வளரும் இடங்கள் அஸ்சாம், மணிப்பூர், மேகாலையா, மீசோராம், நாகாலேண்டு, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடர், சேர்வராயன் மலை, கொள்ளி மலை, கொடைக்கானல், சிறுவாணி, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, கிழக்கு மலைத்தொடர்ச்சி போன்ற இடங்கள். உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது வியாபார நோக்குடன் தரிசு நிலங்களிலும் சம வெளிகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் முள்ளில்லா மூங்கில், (பேம்புசா டுல்டா, பேம்புசா நியுடன்ஸ், பேம்புசா பல்கோவா) மூள் உள்ள மூங்கில் என்று இரு வகையாகப் பிறிக்கலாம். தற்போது முள் இல்லாத மூங்கில் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது. முக்கியமாக இருப்பது முள் மூங்கில், கல்மூங்கில், பச்சைமூங்கில், தட்டைமூங்கில், வல்காரிஸ் மூங்கில், சாப்பாட்டு மூங்கில், பெருமூங்கில், புத்தர் தொந்தி மூங்கில் போன்றவை. நடக்கும் மூங்கில் என்ற வகையுண்டு. நன்றாகத் தண்ணீர் தேவை. இதன் தூர் பக்கவாட்டில் பரவிக்கொண்டே போகும். வேகமான வளர்ச்சியுடையது. மூங்கில்களை நாற்றாக இருக்கும் பொழுது யாராலும் அதன் இனம் கண்டு சொல்ல முடியாது. பெரிதாகும் போது அதன் இலைகள், தோகை-மட்டை-கணு இடைவெளி, கணுவில் தோன்றும் வட்டங்கள் இவை கொண்டு அதன் இனத்தைக் கண்டு பிடிக்கலாம்.

முள் இல்லா மூங்கில்:

60 முதல் 120 ஆண்டுகள் வரை பயன் தரும் பயிர் மூங்கில். இதனால் மூங்கில் நாற்றுகளை நடவு செய்யும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. டெண்டிரோகிளாமஸ், ஸ்டிங்டஸ், பேம்புசா வல்காரிஸ், பேம்புசா பல்கோவா போன்றவகையான மூங்கிலில் முட்கள் இருக்காது. இதனால் அறுவடை செய்யும்போது கழிவுகளை வெட்டி எடுப்பது சுலபமாகிறது. தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்தில் தேசிய மூங்கில் இயக்கத்தின் மூலம் உழவர்கள் முள் இல்லா மூங்கில் இனங்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றை விதையில்லா இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யலாம்.

உற்பத்தி முறைகள்:

நன்கு வளர்ந்த தரமான மூங்கில் தூர்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளான கழிகளை வேறோடு சேர்த்து வெட்டவேண்டும். பின்னர் பக்கக்கிளைகளை கழிகளில் இருந்து ஒரு அங்குலம் விட்டு வெட்டி எடுக்கவேண்டும். பின்னர் இந்த கழிகளை நீண்ட தாழ்வான பாத்திகளில் 1.2மீட்டர் அகலம், ஒரு அடி அகலம், நீளம் தேவைக்கு எடுத்து மணல், மண்ணை 2:1 என்ற அளவில் இட்டு, கழிகளை பதித்து கழிகள் மூடும் அளவிற்கு மண் கலவையைக்கொண்டு மூடவேண்டும். காலை, மாலை நேரங்களில் நீர்ப்பாய்ச்சவேண்டும். இவ்வாறு நட்ட கழிகளில் உயிர் மொட்டுகளிலிருந்து முதலில் புதிய தண்டுகள் 10 முதல் 20 நாட்களில் தோன்றும். பிறகு வேர் தோன்ற ஆம்பித்த இரண்டு மாதங்களில் கன்றுகளைப்பிடுங்கி நடுவதற்கு ஏற்ற நிலையை அடையும். இவ்வாறு வேறுடன் உள்ள தண்டுகளைக்கொண்ட கணுக்களை தனியாக வெட்டிப்பிரித்து பசுமைக்கூண்டில் வைத்து 5 அல்லது 6 மாதம் வயதுடைய நாற்றுகளை வயலில் நடலாம்.

நடவு முறைகள்:

இரண்டு ஆண்டுகள் வயதுடைய கழிகளில் பக்க கிளைகள் கழிகளுடன் இணையும்பகுதிகளில் கணுக்களின் வேர் முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் கொண்ட பக்கக்கிளைகளை கழிகள் அடிபடாமல் அகற்றி 1 அல்லது இரண்டு கணுக்கள் விட்டு வெட்டி 400 பி.பி.எம் முதல் 2000 பி.பி.எம் வரையிலான ஐ.பி.ஏ. என்ற கிரியா ஊக்கியில் மூங்கில் இனங்களுக்கு ஏற்ப ஊறவைத்து 1 மணி நேரத்திற்கு இரண்டு விழுக்காடு பெவிஸ்டினில் நனைத்து பாலித்தீன் பைகளில் நட்டு, நீர் ஊற்றி கன்றுகளை வளர்க்கலாம். விதை, விதையில்லா முறையின் மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை கொண்டு குறுகிய காலத்தில் அதிக அளவு கன்றுகளை உற்பத்தி செய்ய இந்த முறையை பயன்படுத்தலாம். தேர்வு செய்த கன்றுகளை ஊட்டச்சத்து மிக்க பாத்திகளில் 1.2 மீட்டர் அகலம், தேவைகேற்ற நீளம் மற்றும் ஆழம் 1 1/2 அடியில் அமைத்து அதில் மண், மணல், மக்கிய தொழு உரம் ஆகியவற்றை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து 1 அடிக்கு 1 அடி என்ற இடைவெளியில் நடவு செய்யவேண்டும். பசுமைக்குடிலில் நாற்றங்காலில் வளர்க்கவேண்டும். மூங்கில் நாற்றுகளை வயலில் நடுவதற்கு குறைந்தது 6 மாதங்களாவது நாற்றங்காலில் வளர்க்கவேண்டும். 10-12 மாதங்கள் வளர்க்கப்பட்ட வாளிப்பான கண்றுகளை நடுவது மிகவும் நல்லது. எனவே விவசாயிகள் முள் இல்லா மூங்கில் நாற்றுகளை உறபத்தி செய்து அதிகம் லாபம் பெறலாம்.

மூங்கில் உபயோகம்

மூங்கில் உபயோகம் தற்போது அதிகமாக உள்ளது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் சைனா முதலிடம் வகிக்கிறது, அதற்கு அடுத்து இந்தியாதான். மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முடையப் படுகிறது. கைவினைப் பருள்கள் செய்கிறார்கள். மூங்கிலிலிருந்து தரமான வெண்மையான கிழியாத பேப்பர் செய்யப்படுகிறது. நாள்பட ஆனாலும் பேப்பர் பழுப்பு நிறமாக மாறாது. புல்லாங்குழல், மோர்சிங், போன்ற இசைக்கருவிகள், பலவிதமான பாய்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், ஊதுபத்திக் குச்சிகள், மூங்கில் பிளைவுட், வீட்டு உட்புற அழகு சாதனங்கள், ஊருகாய், சல்லடை, மூங்கில் தொட்டி, ஏணிகள் ஆகியவை செய்யப்பயன்படுகிறது. ஒருவிதமான இரண்டரை வருடமான மூங்கில் குறுத்திலிருந்து சாப்பாடு செய்யப்படுகிறது, மலைவாழ் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மூங்கில் சூப் நட்சத்திர ஓட்டல்களில் விற்கப் படுகிறது. கிராமங்களில் வீடுகட்டப் களிகள் பயன் படுகிறது. கட்டிட வேலைக்கு முட்டுக்கள் கொடுக்கப் பயன்படுகிறது. மூங்கில் மண் அறிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு இடையில் ஊடுபயிர்கள் கூட வளர்க்கப்படுகிறது. மூங்கில் நட்ட 3 ஆண்டுகளிலிருந்து லாட வடிவில் களிகளை வெட்டி விற்கலாம். பின் இரண்டுஆண்டுக்கு ஒருமுறை வெட்டிக் கொண்டே இருக்கலாம். மூங்கில் இலை கால்நடைகளுக்குத் திவனமாக் பயன்படுகிறது, மூலிகையாகவும் பயன்படுகிறது. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும் .




Saturday 22 March 2014

உலக தண்ணீர் தினம் -மார்ச் 22

நன்றி தினமணி 
நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது.அதன் பேரில் ஆண்டுதோறும் 1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான். 

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு புதிய விதமான கடுமையான நோ‌ய்க‌ள்.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம்.தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

Friday 21 March 2014

சிட்டுக்குருவி -ஓர் பார்வை


பறவை இனங்களில் மிகச் சிறிதாகவும், அனைவரையும் கவரும் வகையில் கீச் கீச் எனக் கூக்குரலிடுவதுசிட்டுக்குருவியாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சீட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரமயமாக்கலாலும், வயல் வெளிகள் வீட்டு மனைகளாக்கப்பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் பறந்து திரியும் சின்னஞ்சிறியசிட்டுக்குருவிகளை பார்த்து மகிழ்ந்த காலம் போய்,தற்போது சிட்டுக்குருவி இனமே இல்லை எனுமளவுக்கு குறைந்துகாணப்படுகிறது. அவ்வாறு அவற்றின் இனம் அழிந்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து, பறவையியல் ஆராய்ச்சியாளர்களும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். சிட்டுக்குருவிகள் பறப்பதற்கும், கூடுகள் கட்டி வாழ்வதற்கும்முன்பிருந்த வசதிகள் ஏதும் தற்போதைய நகர வாழ்க்கையில்அவற்றுக்கு கிடைக்காததும் சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்குகாரணம் என்றும், நவீன செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களாலும் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயல்களில் போடப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிமருந்துகளாலும் அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும்,அதன் மூலம் சிறு குஞ்சுகளுக்கு அத்தியாவசிய உணவானபூச்சி, புழுக்கள் கிடைக்காமல் போயிருப்பதாகவும் அந்த ஆய்வுகள்தெரிவிக்கின்றன

செல்போன் கோபுரங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப சாதனமான செல்போன்கள் பெருகி விட்ட நிலையில் நகரங்கள் மட்டும் இல்லாது கிராமப்புறங்களிலும் செல்போன் கோபுரங்கள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் இனம் தொடர்ந்து அழியும் நிலை உருவாகி உள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகளை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 20-ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இம்முயற்சியை தொடங்கி உள்ளன. இதன் மூலம் சிட்டுக் குருவிகள் மற்றும் அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் உலக சிட்டுக்குருவி தினம் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.அது முதல் தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

 ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.

தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.

சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.

சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.

சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.

உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள சந்தை ஒன்றில்உள்ள வியாபாரிகளுக்கு, சி்ட்டுக்குருவிகளை வளர்க்க தேவையானகூண்டுகளை தனியார் அமைப்பு ஒன்று வழங்கி வருகிறது. அவ்வாறுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து, மிகக்குறைந்த எண்ணிக்கையில்இருந்த குருவிகள், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையாகபெருகி உள்ளன.

அந்த இனத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும் முன்வரவேண்டுமெனவும், இயந்திர மயமாகி விட்ட இக்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க சிட்டுக்குருவிகள் பெரும்
பங்கு வகிப்பதாகவும், விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கவும்,அவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ஆம் தேதியான இன்றைய தினத்தை,சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை, கடந்த 2010ஆம்ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளும் அனுசரித்து வருகின்றன.


சிட்டுக்குருவிகளை காப்போம், 
சிட்டுக்குருவிகள்விரும்பி உண்ணும் தானியங்களை பயிரிடுவோம் 

என்றஉறுதிமொழிகளை மனதில் ஏற்கும் வகையில் உறுதிஎடுப்போம்…..

சிட்டுக்குருவி இனத்தை அழிவிலிருந்து மீட்டெடுப்போம்….

இயற்கை சுழற்சியினை பாதுகாப்போம்......

சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க எங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு....





இப்படி அமைத்ததனால் எங்கள் வீட்டினைசுற்றி வரும் குருவிகளின் ஆர்ப்பரிப்பு





முயற்சி செய்வோம் இயற்கையினை காப்போம்....





Monday 3 March 2014

மரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி

மரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி:-


மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு இந்தியாவில் இருந்து வந்த தடையை திடீர் என்று நீக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.இதையடுத்து, 200 விதமான பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை களமாக இந்தியா மாறியிருக்கிறது.இந்த விஷயம் நாடுமுழுக்க இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக திருமதி ஜெயந்தி நடராஜன் இருந்தபோது மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு தடை விதித்திருந்தார்.அந்த தடை தான் தற்போது விலக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்பவை, இயற்கைச் சூழலை சிதைப்பவை. பாரம்பரியமாக இருக்கும் விதைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்க வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காகவே... மரபணு மாற்றப்பட்ட விதைகள் இங்கே திணிக்கப்படுகின்றன. 

ஏற்கெனவே 260 மில்லியன் டன் உணவு உற்பத்தி இங்கே நடக்கிறது. இதுவே இந்தியாவின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், உற்பத்தியை பெருக்குவதற்காகத்தான் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி என்று சொல்வது... கேலிக்குரியது.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், மனித உயிர்களுக்கு கேடு விளைவிப்பவை. எனவே இவற்றை இந்தியாவில் அனுமதிப்பது என்பது, இந்தியர்களின் உயிருக்கு உலை வைப்பதற்கு சமம்.

ஆனால், இது எதையும் கவனத்தில் கொள்ளாமல், அனுமதி கொடுத்திருக்கின்றார் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி.

மரபணு பொறியியல் ஒப்புதல் குழுவால் (Genetic Engineering Appraisal Committee) கடந்த மார்ச்மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அரிசி, கோதுமை, சோளம், ஆமணக்கு, பருத்தி, மேலும் 200 க்கும் மேற்பட்ட பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல்  அமுலுக்கு வந்த மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், மத்திய அரசால் கள பரிசோதனை செய்ய வழங்கப்பட்ட  அனுமதி, அவர்கள் ஒப்புதல் கொடுத்த ஆண்டில் நடத்தப்பட வில்லை  என்றாலும் கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் செல்லத்தக்கது என்றும் ஆனால் மாநில அரசு தடையில்லாச்சான்று கொடுத்தால் மட்டுமே களப்பரிசோதனை செய்ய இயலும்.

பஞ்சாப், அரியானா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற சில மாநிலங்களில் களப்பரிசோதனை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது, அரசாங்கம் பிடி பருத்தியில் ( மரபணு மாற்றப்பட்ட பருத்தி   ) வணிக ரீதியான உற்பத்தி அனுமதிக்கிறது  . பிடி கத்தரிக்காய் அதன் கள பரிசோதனையில் வெற்றி பெற்றது என்றாலும், சமூக குழுக்களினால் ஏற்பட்ட  வலுவான எதிர்ப்புக்கள் காரணமாக வணிக ரீதியிலான உற்பத்தி மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி அளிக்கப்படவில்லை

ஒன்று படுவோம் போராடுவோம் மரபணு மாற்றப்பட்ட விதைகளினை அனுமதியோம்....

எதிர்ப்பினை இங்கே பதிவு செய்யுங்கள்

அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகளுடன் Tweet செய்யுங்கள் இங்கிருந்து நேரிடையாக

Sunday 23 February 2014

இயற்கை சீற்ற மேலாண்மை -எல்நினோ

எல்நினோ

This image of Earth shows the strong El Niño of 1997
எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் உடையதாகும். டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உருவாகும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். 

பெரு, ஈக்வடார் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும்.இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது. முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறதுஎல்நினோ எனப்படும் மோசமான காலநிலை மாற்றமானது நடப்பாண்டு மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது. இதனால் வறட்சி,உணவுப்பொருள் தட்டுபாடு போன்றவை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. 

கிழக்கு மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது. மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும். இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது. 

எல்நினோ உண்டாவதால் ஏற்படும் தாக்கம்:-

கிழக்கத்திய பசிபிக் பகுதிகளில் மழையை அதிகரிக்கிறது
மேற்கத்திய பசிபிக் பகுதிகளில் வறட்சியை அதிகரிக்கிறது. இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.
கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் ஈக்வடார் பொருளாதாரரீதியாக பாதிக்கிறது. வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.
உடல்நிலை பிரச்சினை,முக்கியமான வறட்சி பகுதிகளில் ஏற்படுகிறது.


பசிபிக் பெருங்கடலின் சாதாரணமான காலநிலை :-


சாதாரணமான காலநிலை :
எல்நினோவின் தோற்றமானது தென்பசிபிக் பெருங்கடலின் மேற்பகுதியிலே தோன்றுகின்ற ஒரு நிகழ்வாகும். பசிபிக் பெருங்கடலின் சாதாரணமான காலநிலையினை அறிந்து கொள்வதன் மூலம் எல்நினோவின் உருவாக்கத்தினை அறிந்து கொள்ள இயலும்.சாதாரணமாக பசிபிக் பெருங்கடலின் மேற்கு கரை கடற்பகுதிகளில் தாழமுக்க நிலை காணப்படுவதால் அதிக மழைவீழ்ச்சியும், மாறாக கிழக்கு கடற்கரைப்  பகுதிகளில் உயரமுக்க நிலை காணப்படுவதால் இப்பிரதேசங்களில் குறைந்தளவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்றது.



எல்நினோ காலநிலை:-

எல்நினோ காலநிலை
எல்நினோ நிகழ்வின் காரணமாக மேற்கு பசிபிக் பெருங்கடலில் மேற்கிருந்து கிழக்காக கடலின் வெப்பநிலையானது அதிகரிக்குமாறு கடற்பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை நகர்கின்றது. இதனால் மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது அதிகரித்து அதிக வெப்பநிலையினை ஏற்படுத்துகின்றது. இந்நிகழ்வினால் சாதாரணமாக பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்ற தாழமுக்க, உயரமுக்க நிலைகள் இடம் மாறுகின்றன. பெரு கடற்கரையை ஒட்டிய மேற்கு பசிபிக் பகுதியில் சாதாரணமாக காணப்படக்கூடிய நிலைக்கு மாறாக தாழமுக்க நிலை உருவாகுவதுடன், கிழக்கு பசிபிக் பகுதியில் உயரமுக்க நிலையும் தோன்றுகின்றது.மேற்கு பசிபிக் பகுதிகளில் இத்தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதத்தின் அளவு குறைந்து, குறைவான மழைவீழ்ச்சியைக் கொண்ட வறண்ட நிலைமை ஏற்படுகின்றது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆபிரிக்கா முதலிய பகுதிகளுக்கு வறண்ட காலநிலையை ஏற்படுத்துகின்றது. அதேவேளை குறைந்த மழையைப் பெற வேண்டிய கிழக்கு பசிபிக் பகுதியானது மிதவெப்பத்துடனும், அதிக மழையையும் பெற்றுக்கொள்கின்றது.எல்நினோவானது 2- 7 வருட இடைவெளியில் எப்போதாவது தோன்றும். அத்துடன் இது 12-18 மாதங்கள் வரை நீடிக்கும்.


Monday 3 February 2014

மூலிகைச்செடிகள் பாகம் 5

மூலிகைச்செடிகள் பாகம் 5

அம்மான் பச்சரிசி:-

மூலிகைச்செடி என்று கூறிவிட்டு இது என்ன பச்சரிசி புழுங்கலரிசி என பெயர் கூறுவது விந்தையாக உள்ளதா?இதன் பெயர் அம்மான் பச்சரிசி தான்.தமிழில் அம்மான் பச்சரிசி என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் Euphorbia hirta என்பது ஆகும்.

வகைப்பாடு :-

திணை:    (இராச்சியம்) தாவரம்

வகுப்பு :-  Magnoliopsida

வரிசை:  Magnoliophyta

பேரினம்:  Euphorbia

இனம்:   E. hirta

அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு.இச்செடிகள் சாதாரணமாக தரிசு நிலங்கள், சாலை ஓரப்பகுதிகள் மற்றும்  ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் காணப்படும்.களைச்செடி போல தோற்ற்ம் தரக்கூடியவை.கால அளவு கிடையாது ஆண்டு முழுவதும் பரவலாக காணப்படுபவை.உயரமாக வளரக்கூடிய செடி வகை.சுமார் 50 செ.மீ வரை வளரும்.இலைகள் அமைப்பு எதிரெதிராக அமைந்தவை.சொரசொரப்பாக காணப்படும்.சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் இலைகள் காணப்படும்.சிறு சிறு பூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும்.இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு.


வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்

சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்

ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே

கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- என அகத்தியர் குணபாடத்தில் அம்மான் பச்சரிசி பற்றி கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பலன்கள்:-

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது தடவினால் கொப்புளங்களின் வீக்கங்கள் குணமாகும்.

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
இதன் இலையை கிள்ளினால் பால் வரும்.அதனை மரு உள்ள இடத்தில் தடவியும் இலைகளினை நன்கு கசக்கி அதனையும் மருவின் மேல் தடவி வர மரு உதிர்ந்து விடும். 

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.

இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.

Sunday 12 January 2014

போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....

போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....

 தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்பதென்பது, பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.துன்பம் ,வறுமை போன்ற குப்பைகளினை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையினை எதிர்கொள்ளும் நாளாகும்.பண்டைய காலங்களில் மழை கொடுத்து விவசாயத்தை பாங்குறச்செய்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக போகிபண்டிகை கொண்டாடப்பட்டது.


   அக்காலங்களில் இதைப்போன்ற பிளாஸ்டிக்,டயர் போன்ற எரிக்கும் போது மாசுபடுத்துகின்ற பொருள்கள் இருந்ததில்லை.மேலும் அவை போன்ற பொருள்களினை எரித்ததும் இல்லை.ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வில் அங்கம் வகிக்கும் பிளாஸ்டிக்,ரப்பர் பொருள்கள் போன்றவற்றினை எரிக்கும் போது அவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.போகி கொண்டாடுவதாகக்கூறி தேவையில்லாத பழைய டயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இதனால் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்சைடு,நைட்ரசன் ஆகஸைடு,கந்தக டை ஆக்ஸைடு,டயாக்சின்,ஃபுயூரான்,உள்ளிட்ட புகைகள் வெளிப்படுகின்றன.இவை காற்றில் கலப்பதால் கண்,மூக்கு,தொண்டை மற்றும் தோல் எரிச்சல் ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படும்.இதர பல்வேறு உடல் நலக்கேடுகளும் ஏற்ப இப்புகைமண்டலம் காரணமாக அமைகின்றது.மார்கழி மாதம் ஏற்கனவே பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் இப்புகைமூட்டமானது வளிமண்டலத்தில் நிரம்பி பார்க்கும் திறனை குறைத்து சாலைப்போக்குவரத்து,இரயில் போக்குவரத்து ,விமான போக்குவரத்து போன்றவையும் பாதிக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துகின்றது.உயர்நீதிமன்றம் பழைய மரச்சாமான்கள், வரட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. எனவே, போகிப்பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருள்களை எரிக்காமல் பழைய முறையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாவகையில் போகியினை கொண்டாடி மகிழ்வோம்.

இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை(அதாவது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத பொருள்களை) மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இந்த தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் ,புதிய உத்வேகத்துடனும்,சுற்றுச்சுழலினை பாதிக்காத வகையில் இருப்போம் எனவும் உறுதியேற்று பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.


உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....

Sunday 5 January 2014

யானை ”வழித்தடம் தேடி.....”

யானை :”வழித்தடம் தேடி.....”
 
மேற்குத்தொடர்ச்சி மலை.இது வனவிலங்குகள் வாழ ஏற்ற இடம்.எங்கு பார்த்தாலும் அடர்ந்தகாடுகள்.வனவிலங்குகள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள இடம்.தேவையான உணவு,நீர் கிடைக்கக்கூடிய இடம்.

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலை. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகைஇருவாழ்விகளும் உள்ளன.

இம்மலைத்தொடர் மகாராஷ்ரா, குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில்முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) . இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக விளங்குகிறது.

மேற்குதொடர்ச்சி மலையில் தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என பல நதிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள உயர்ந்த சிகரங்கள் ஆனைமுடி (2695 அடி), தொட்டபெட்டா (2637). பலதரப்பட்ட தாவரங்கள், முட்புதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இங்கு உயிர் வாழ்கின்றன. இலையுதிர்காடுகள், ஊசியிலை காடுகள், அடர்காடுகள், சோலை காடுகள், பசுமைமாறா காடுகள் என உயிரினங்களின் வாழ்விடங்களும் உள்ளன. இம்மலைத் தொடரில் ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களில் 1000 முதல் 9 000 மி.மீ., அளவு மழை பொழிகிறது. 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இங்கு 4000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன. இதில் 56 வகை தாவரங்கள் வேறெங்கும் இல்லாத வகையில், இம்மலைத் தொடரில் மட்டுமே காணப்படுகின்றன. 1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளவை. 63 சதவீத மரவகைகள் இங்குள்ளன.

விலங்குகளில், 120 வகையான பாலூட்டி இனங்களும், 121 வகையான நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற உயிரினங்களும், 600 வகையான பறவைகளும், 157 வகையான ஊர்வன இனங்களும்,218 வகையான மீன் இனங்களும் இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய ‘கூரை மன்னி’, மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன. காட்டுப் பன்றி, கீரி, நீர்நாய், மரநாய் போன்ற இனங்களைச் சேர்ந்த 31 வகைகளில் 12 இங்கு உள்ளன. 15 வகை பூனை இனங்களில் ஐந்து வகை இம்மலைத் தொடரில் உள்ளது. உலகளவில் உள்ள 4 வகை கழுதைப் புலி வகையில் ஒரு வகை இங்குள்ளது. ஆறுவகை நரி, நாய், ஓநாய் போன்றவற்றில் ஐந்து வகை இங்குள்ளன. நான்கு வகை கரடிகளில் ஒன்று, இரண்டு வகை முயல்களில் ஒன்று இங்குள்ளது. இந்தியாவில் உள்ள 15 குரங்கு வகைகளில் ஐந்து இங்கு உள்ளன. 218 மீன்வகைகளில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன.

யானைகள்:-

மேற்கு தொடர்ச்சி மலை யானைகளின் சொர்க்கம் என்றால் அதில் மிகை இல்லை.இங்கே 6700க்கும் மேற்ப்பட்ட யானைகள் வசிப்பதாக 2005ஆம் ஆண்டு வனத்துறையின் ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், ஈரோடு, அந்தியூர், ஆனைமலை, மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மிக மிக அதிகம். யானைகள் மற்ற எந்த விலங்குகளை போலவும் இல்லாமல் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவை. சரியான ‘காடோடி’கள். அதற்குக் காரணம் அவற்றின் உணவுப் பழக்கம். 

ஒருநாளுக்கு 100 முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணுகின்றன இந்த யானைகள். அதோடு 100 முதல் 150 லிட்டர் அளவில் தண்ணீர் குடிக்கின்றன. வறட்சிக் காலங்களில் உணவு தேடி பல நூறு கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஒரே ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் நீரும் தேவையென்றால் குடும்பமாகவே (5லிருந்து 15யானைகள்) வாழக்கூடிய இந்த உயிரினத்திற்கு எவ்வளவு உணவும் தண்ணீரும் தேவைப்படும்! அதனால் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முகாமிட்டு அங்கிருக்கிற தாவரங்களை மொத்தமாக உண்டு காலிசெய்த பின்தான் அங்கிருந்து நகரும்.அடுத்து? அடுத்த காடு... அங்கே மொத்தமாக சாப்பிடுவதும்... மீண்டும் அடுத்த காடு... இப்படி ஒரு சுற்று முடித்து, பழைய காட்டிற்கு வந்தால் அங்கே தேவையான தாவரங்கள் மீண்டும் வளர்ந்துவிடும்! இயற்கையாக நடைபெறும் சுழற்சி இது.

யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ அதை அப்படி அழைப்பது வழக்கம். அதாவது அவை மரங்களை உடைத்துப்போட்டும், புதர்களை மிதித்து அழித்தும், பிடுங்கியும் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளை புல்வெளிகளாக மாற்றுகின்றன. இதனால், பல உயிரினங்களுக்கு உணவோடு வாழ ஏற்ற இடம் உருவாகிறது. இறந்த யானையை அழிந்துவரும் பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகள், நரி, கழுதைப்புலி, செந்தாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் உண்கின்றன. இது பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. யானையின் சாணத்தில் ஜீரணிக்கப்படாத உணவு துணுக்குள், விதைகள் அணில், வௌவால், வண்டு, பூச்சிகள் என பல விலங்குகளுக்கும் உணவாகிறது. வறட்சிகாலத்தில் யானைகள் நதிக்கரையோரம் தோண்டுகிற ஊற்றுக்குழிகள் மற்ற விலங்குகளின் தாகத்தை தணிக்கிறது.

காடுவிட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களுக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் மட்டுமே பயணிக்கும் குணம் கொண்டவை. இதை யானைகளின் வழித்தடம் (ELEPHANT CORRIDORS) என்று அழைக்கிறார்கள்.வயதில் மூத்த பெண் யானையே அந்தக் கூட்டத்தை வழி நடத்திச் செல்லும்.
 ஆறாயிரம் யானைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவை பயன்படுத்துகிற வழித்தடங்கள் 19தான்! அதில் நான்கு பாதைகள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்கின்றன.இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் யானைகள் வாழ்ந்து வருகின்றன.ஆனால் இப்போதோ நகரமயமாதல்,பொருளாதாரவளர்ச்சி என்ற போர்வையில் யானைகளின் வழித்தடம் ஆக்ரமிக்கப்படுகின்றன.இதனால் காலம்காலமாக காடு விட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களது பாதையினை மறந்து பயணிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.இல்லை இல்லை நாம் ஏற்படுத்துகின்றோம்.

வால்பாறை செல்லும் பாதை
வால்பாறை பகுதி நான்கு பக்கமும் மலைக்காடுகள் சூழ்ந்த பகுதி. ஒருபக்கம் ஆனைமலை புலிகள் சரணாலய காடுகள். இன்னொரு பக்கம் இரவிக்குளம் தேசிய பூங்கா. வால்பாறையின் மேலே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், வளச்சல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என நான்கு பக்கமும் காடுகள் சூழ நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நான்கு காடுகளும் யானைகளின் முக்கிய வாழ்விடங்களாகவும் அவற்றிற்கு தேவையான உணவினை வழங்குபவையாகவும் உள்ளன. காட்டுயானைகள் இந்தக் காடுகளில் இருந்து மற்ற காட்டிற்குள் செல்வதாக இருந்தால் வால்பாறையின் பிரதான தேயிலைத் தோட்டங்களை கடந்தே செல்ல வேண்டியதாயிருக்கிறது. இதை மனதில் வைத்து 1920களில் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களை உருவாக்கும் போதே பிரிட்டிஷ் அரசு ’துண்டுச் சோலைகள்’ எனப்படும் வனப்பகுதிகளை வால்பாறையில் அமைத்தது. துண்டுச் சோலைகள் என்பது தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பெரிய அளவிலான வனப்பகுதிகளை வனவிலங்குகளுக்காக விட்டுவைப்பது. இதன் மூலம் யானைகள் மட்டுமல்லாது இன்னபிற விலங்குகளும் தன் பாதையிலிருந்து விலகாமல் இந்தத் துண்டுச் சோலைகளின் வழியாக ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு இடையூறின்றிப் பயணிக்கும.ஆனால் இன்றோ அந்த துண்டு சோலைகள் அழிக்கப்பட்டு,ஆக்ரமிக்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது.என்னதான் மனிதர்கள் வனத்தினை அழித்திருந்தாலும் யானைகள் இப்போதும் அந்தத் துண்டாகிப் போன சோலைகளை பயன்படுத்தியே நகர்கின்றன. அதுவும் மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் மட்டுமே.யானைகளுக்கு இருக்கும் அந்த அறிவு கூட மனிதனுக்கு இல்லை.அவற்றின் வழித்தடங்களினை ஆக்ரமித்துக்கொண்டு யானை நம்மிடத்திற்குள் வந்துவிட்டது என கூக்குரலிடுகின்றான்.

தமிழகத்தில் யானை- மனித மோதல் அதிகம் நடக்கும் பகுதியாக கோவை மாவட்டம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் மேட்டுப்பாளையம்- கல்லாறு பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் வனத்தையொட்டிய பகுதிகளில் பெருகிவிட்ட கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்களால் யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.113 ஏக்கரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் புலங்கள் சாடிவயல்- தாணிக்கண்டி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி, போதிய துறைகளின் அனுமதியின்றி, கட்டுமானங்களை நிறுவியுள்ளது உலகப்புகழ் பெற்ற ஈஷா யோகா மையம் . ஆனால், அப்பகுதியில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலுக்கு ஈஷா மட்டும் காரணமல்ல, போதிய அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா விடுதி, சின்மையா சர்வதேச உறைவிட பள்ளி உள்ளிட்ட 15 அமைப்புகளும் காரணம்.மலையிடப் பாதுகாப்பு குழு,வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை முதலான அரசுத்துறையிடமிருந்து தடையில்லாச்சான்று பெற வேண்டும்.ஆனால்  எவ்வித அனுமதியும் பெறாமல் யானையின் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளை ஒட்டி தனியார் கட்டடங்கள் அமைவதை தடுக்க வேண்டிய அரசு அமைப்புக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. கட்டடங்களால், வனப்பகுதியின் தன்மை, சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அரசு அமைப்புகளுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை அகற்ற தயவு தாட்சண்யம் பாராமல் உரிய நேரத்தில் அரசு அமைப்புகள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மனித-விலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.எதிர்கால சந்ததியினருக்கு யானை என்ற விலங்கினை விட்டுச்செல்ல முடியும் இதே நிலை தொடர்ந்தால் புகைப்படங்களில் மட்டுமே யானை என்ற விலங்கு இருந்ததை காண்பிக்கமுடியும்.
  

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த திரு கஸ்தூரி ரங்கன் அவர்களது அறிக்கை



Saturday 4 January 2014

பிளாஸ்டிக்....என்னும் எமன் உருவான விதம்....

பிளாஸ்டிக்....என்னும் எமன் உருவான விதம்....

 
வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று பிளாஸ்டிக் என்றால் மிகையில்லை.இன்று பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து நம் இயற்கை சூழ்நிலையையே பாழ்படுத்திவருகிறது.
பாழ்படுத்தி வருகிறோம்.ஆனால்
பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது !!

இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம் ..!

மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட.., அது என்ன ‘இயற்கை பிளாஸ்டிக்’ இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா.? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை …!

இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.

சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்டுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு ‘Parkesine Company’ என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.

பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து ‘Parkesine Company’ மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான ‘பெர்கின் மெடலை’ (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.

அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக ‘பேக்லைட்’’ வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.

இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம். இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக்கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.

இயற்கைக்கு ஒவ்வாத இயற்கையோடு கலவாத இந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினை குறைத்து எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்ல சபதம் ஏற்போம்.


Wednesday 1 January 2014

அமிர்த கரைசல்

அமிர்த கரைசல் :-

அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள்.அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும்.
பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.

தயாரிக்கும் முறை:-

நாட்டுப்பசு சாணம்- 10 கிலோ ,
நாட்டுப்பசு கோ-மூத்ரம்- 10 லிட்டர்
இவற்றை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு அதில் வெல்லம் - 250 கிராம்
தண்ணீர் -200 லிட்டர்

ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.( பசும் சாணம் புதியதாக இருந்தல் அவசியம். கோ-மூத்ரம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும் ) .இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இப்பொழுது அமிர்த கரைசல் தயார்.


பயன் படுத்தும் முறை :

ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும்.பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.