Sunday 13 April 2014

முள் இல்லாத மூங்கில் - ஓர் பார்வை


முள் இல்லாத மூங்கில்


ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை உயரம் வளரக்கூடிய மூங்கில் மற்ற மர வகைகளிலிருந்து வேறுபட்ட ஒரு தொடர் பயிராகும். முள், முள்ளில்லா மூங்கில்கள் என இருவகை மூங்கில் வகைகள் உள்ளன. மூங்கில் கூடை, ஏணி, தட்டி போன்ற பொருட்கள் செய்வதற்கு பயன்பட்டாலும் இன்றைய காலல கட்டத்தில் இவை பல மதிப்பூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதிக லாபம் ஈட்டும் பயிராக விளங்குகிறது. இன்றைய கால கட்டத்தில் மூங்கில் காகிதங்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கும், மின் சக்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் மூங்கில் கரி பல பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.தமிழ்நாட்டில் இரண்டு மூங்கில் வகைகள் மிக அதிக அளவு பரப்பளவில் சாகுபடிச் செய்யப்படுகின்றன. அவை மிதமான வறண்ட பகுதிகளில் வளரும் கல் மூங்கில், ஈர செழிப்புள்ள பகுதியில் வளரும் முள்மூங்கில் (அல்லது) பொந்து மூங்கில் ஆகும். இவை தவிர இன்றைய கால கட்டத்தில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து, அதிக லாபம் தரக்கூடிய புதிய முள்ளில்லா மூங்கில் ரகங்களாகிய பாம்பூசா வல்காரிஸ் மற்றும் பாம்பூசா பல்கோவா போன்ற மூங்கில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.மூங்கில் ஒரு மரவகைப் புல். இது தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படும். உலகளவில் 1250 வகைகள்உள்ளன. இந்தியாவில் 23 ரகத்தில் 125 பிரிவுகள் உள்ளன. இந்தியாவின் மொத்த மூங்கில் காடு பரப்பளவு10.03 மில்லியன் ஹெக்டர் ஆகும். இது12.8 சதவிகிதம் தான். அதிகமாக மூங்கில்கள் வளரும் இடங்கள் அஸ்சாம், மணிப்பூர், மேகாலையா, மீசோராம், நாகாலேண்டு, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடர், சேர்வராயன் மலை, கொள்ளி மலை, கொடைக்கானல், சிறுவாணி, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, கிழக்கு மலைத்தொடர்ச்சி போன்ற இடங்கள். உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது வியாபார நோக்குடன் தரிசு நிலங்களிலும் சம வெளிகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் முள்ளில்லா மூங்கில், (பேம்புசா டுல்டா, பேம்புசா நியுடன்ஸ், பேம்புசா பல்கோவா) மூள் உள்ள மூங்கில் என்று இரு வகையாகப் பிறிக்கலாம். தற்போது முள் இல்லாத மூங்கில் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது. முக்கியமாக இருப்பது முள் மூங்கில், கல்மூங்கில், பச்சைமூங்கில், தட்டைமூங்கில், வல்காரிஸ் மூங்கில், சாப்பாட்டு மூங்கில், பெருமூங்கில், புத்தர் தொந்தி மூங்கில் போன்றவை. நடக்கும் மூங்கில் என்ற வகையுண்டு. நன்றாகத் தண்ணீர் தேவை. இதன் தூர் பக்கவாட்டில் பரவிக்கொண்டே போகும். வேகமான வளர்ச்சியுடையது. மூங்கில்களை நாற்றாக இருக்கும் பொழுது யாராலும் அதன் இனம் கண்டு சொல்ல முடியாது. பெரிதாகும் போது அதன் இலைகள், தோகை-மட்டை-கணு இடைவெளி, கணுவில் தோன்றும் வட்டங்கள் இவை கொண்டு அதன் இனத்தைக் கண்டு பிடிக்கலாம்.

முள் இல்லா மூங்கில்:

60 முதல் 120 ஆண்டுகள் வரை பயன் தரும் பயிர் மூங்கில். இதனால் மூங்கில் நாற்றுகளை நடவு செய்யும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. டெண்டிரோகிளாமஸ், ஸ்டிங்டஸ், பேம்புசா வல்காரிஸ், பேம்புசா பல்கோவா போன்றவகையான மூங்கிலில் முட்கள் இருக்காது. இதனால் அறுவடை செய்யும்போது கழிவுகளை வெட்டி எடுப்பது சுலபமாகிறது. தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்தில் தேசிய மூங்கில் இயக்கத்தின் மூலம் உழவர்கள் முள் இல்லா மூங்கில் இனங்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றை விதையில்லா இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யலாம்.

உற்பத்தி முறைகள்:

நன்கு வளர்ந்த தரமான மூங்கில் தூர்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளான கழிகளை வேறோடு சேர்த்து வெட்டவேண்டும். பின்னர் பக்கக்கிளைகளை கழிகளில் இருந்து ஒரு அங்குலம் விட்டு வெட்டி எடுக்கவேண்டும். பின்னர் இந்த கழிகளை நீண்ட தாழ்வான பாத்திகளில் 1.2மீட்டர் அகலம், ஒரு அடி அகலம், நீளம் தேவைக்கு எடுத்து மணல், மண்ணை 2:1 என்ற அளவில் இட்டு, கழிகளை பதித்து கழிகள் மூடும் அளவிற்கு மண் கலவையைக்கொண்டு மூடவேண்டும். காலை, மாலை நேரங்களில் நீர்ப்பாய்ச்சவேண்டும். இவ்வாறு நட்ட கழிகளில் உயிர் மொட்டுகளிலிருந்து முதலில் புதிய தண்டுகள் 10 முதல் 20 நாட்களில் தோன்றும். பிறகு வேர் தோன்ற ஆம்பித்த இரண்டு மாதங்களில் கன்றுகளைப்பிடுங்கி நடுவதற்கு ஏற்ற நிலையை அடையும். இவ்வாறு வேறுடன் உள்ள தண்டுகளைக்கொண்ட கணுக்களை தனியாக வெட்டிப்பிரித்து பசுமைக்கூண்டில் வைத்து 5 அல்லது 6 மாதம் வயதுடைய நாற்றுகளை வயலில் நடலாம்.

நடவு முறைகள்:

இரண்டு ஆண்டுகள் வயதுடைய கழிகளில் பக்க கிளைகள் கழிகளுடன் இணையும்பகுதிகளில் கணுக்களின் வேர் முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் கொண்ட பக்கக்கிளைகளை கழிகள் அடிபடாமல் அகற்றி 1 அல்லது இரண்டு கணுக்கள் விட்டு வெட்டி 400 பி.பி.எம் முதல் 2000 பி.பி.எம் வரையிலான ஐ.பி.ஏ. என்ற கிரியா ஊக்கியில் மூங்கில் இனங்களுக்கு ஏற்ப ஊறவைத்து 1 மணி நேரத்திற்கு இரண்டு விழுக்காடு பெவிஸ்டினில் நனைத்து பாலித்தீன் பைகளில் நட்டு, நீர் ஊற்றி கன்றுகளை வளர்க்கலாம். விதை, விதையில்லா முறையின் மூலம் உற்பத்தி செய்த கன்றுகளை கொண்டு குறுகிய காலத்தில் அதிக அளவு கன்றுகளை உற்பத்தி செய்ய இந்த முறையை பயன்படுத்தலாம். தேர்வு செய்த கன்றுகளை ஊட்டச்சத்து மிக்க பாத்திகளில் 1.2 மீட்டர் அகலம், தேவைகேற்ற நீளம் மற்றும் ஆழம் 1 1/2 அடியில் அமைத்து அதில் மண், மணல், மக்கிய தொழு உரம் ஆகியவற்றை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து 1 அடிக்கு 1 அடி என்ற இடைவெளியில் நடவு செய்யவேண்டும். பசுமைக்குடிலில் நாற்றங்காலில் வளர்க்கவேண்டும். மூங்கில் நாற்றுகளை வயலில் நடுவதற்கு குறைந்தது 6 மாதங்களாவது நாற்றங்காலில் வளர்க்கவேண்டும். 10-12 மாதங்கள் வளர்க்கப்பட்ட வாளிப்பான கண்றுகளை நடுவது மிகவும் நல்லது. எனவே விவசாயிகள் முள் இல்லா மூங்கில் நாற்றுகளை உறபத்தி செய்து அதிகம் லாபம் பெறலாம்.

மூங்கில் உபயோகம்

மூங்கில் உபயோகம் தற்போது அதிகமாக உள்ளது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் சைனா முதலிடம் வகிக்கிறது, அதற்கு அடுத்து இந்தியாதான். மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முடையப் படுகிறது. கைவினைப் பருள்கள் செய்கிறார்கள். மூங்கிலிலிருந்து தரமான வெண்மையான கிழியாத பேப்பர் செய்யப்படுகிறது. நாள்பட ஆனாலும் பேப்பர் பழுப்பு நிறமாக மாறாது. புல்லாங்குழல், மோர்சிங், போன்ற இசைக்கருவிகள், பலவிதமான பாய்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், ஊதுபத்திக் குச்சிகள், மூங்கில் பிளைவுட், வீட்டு உட்புற அழகு சாதனங்கள், ஊருகாய், சல்லடை, மூங்கில் தொட்டி, ஏணிகள் ஆகியவை செய்யப்பயன்படுகிறது. ஒருவிதமான இரண்டரை வருடமான மூங்கில் குறுத்திலிருந்து சாப்பாடு செய்யப்படுகிறது, மலைவாழ் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மூங்கில் சூப் நட்சத்திர ஓட்டல்களில் விற்கப் படுகிறது. கிராமங்களில் வீடுகட்டப் களிகள் பயன் படுகிறது. கட்டிட வேலைக்கு முட்டுக்கள் கொடுக்கப் பயன்படுகிறது. மூங்கில் மண் அறிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு இடையில் ஊடுபயிர்கள் கூட வளர்க்கப்படுகிறது. மூங்கில் நட்ட 3 ஆண்டுகளிலிருந்து லாட வடிவில் களிகளை வெட்டி விற்கலாம். பின் இரண்டுஆண்டுக்கு ஒருமுறை வெட்டிக் கொண்டே இருக்கலாம். மூங்கில் இலை கால்நடைகளுக்குத் திவனமாக் பயன்படுகிறது, மூலிகையாகவும் பயன்படுகிறது. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும் .




No comments:

Post a Comment