Saturday 31 August 2013

நிலமெனும் நல்லாள் நகும்-தேசிய நீர்க் கொள்கை - 2012

தேசிய நீர்க் கொள்கை - 2012 

தேசிய நீர்க் கொள்கை - 2012 அறிவுறுத்தியபடி, இந்தியாவின் நீர்ஆதாரங்களை - நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் உள்ள நீர்அளவு குறித்த தகவல்களை - வரைபடமாக்கும் திட்டத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

மத்திய நீர்ஆதார அமைச்சகத்தின் சார்பில் நிறைவேற்றப்படவிருக்கும் இந்த "நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுத் திட்டம்', 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தியா முழுவதும் 8.89 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நீர்ஆதாரம் குறித்த வரைபட விவரத்தை நமக்கு அளிக்கும்.

இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.3319 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 14.36 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கான நீர்ஆதார வரைபடத்தை 13வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நிறைவேற்றவுள்ளனர்.

நதிநீர், ஓடை நீர் கிடைக்காத பெருவாரியான மக்கள் நிலத்தடி நீரைத்தான் குடிக்கவும், வயலுக்கு நீர்ப்பாய்ச்சவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குளம் மற்றும் ஏரி, வாய்க்காலிலிருந்து தேவையான நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்திவந்த காலத்தில் நிலத்தடி நீர் குறையவில்லை. ஆனால், நகர் விரிவாக்கத்தாலும், தொழில்சாலை பெருக்கத்தாலும் சக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நிலை உருவான பிறகுதான் இந்தியா முழுவதிலுமே நிலத்தடி நீர் கீழே இறங்கத் தொடங்கியது.

ஊரகப் பகுதியில் 85 விழுக்காடு குடிநீரும், நகர்ப்புறத்தில் 45 விழுக்காடு குடிநீரும் நிலத்தடியில் கிடைக்கும் நீர்தான். இதுதவிர, விவசாயத்துக்காகவும், தொழில்துறைக்காகவும்- பாட்டில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களும்கூட இதில் அடங்கும் - நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வெறும் 50 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்த பல இடங்களில், தற்போது 300 அடி ஆழத்துக்கும் அதிகமாக கீழே சென்றால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலைமை உருவான பிறகுதான், நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இப்போதுதான் வரைபடம் போடவே தொடங்கியிருக்கிறார்கள்.

நிலத்தடிநீர் இந்தியா முழுவதிலும் குறைகிறது என்கின்ற கணக்கீடே உத்தேசமானது. முழுமையான ஆய்வு செய்யப்பட்டால், மத்திய அரசு தரும் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் மிக மோசமான நிலைமையில் இருக்கும். மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம்தான் இந்த கணக்கெடுப்பைச் செய்கின்றது. அவர்கள் இந்தியா முழுவதிலும் 15653 கிணறுகளை ஆய்வுக் கிணறுகளாகக் கொண்டு, அந்தக் கிணற்றில் நீர் அளவு குறைவது மற்றும் கூடுவதை வைத்துத்தான் பொதுவான, சராசரியான கணக்கீட்டைச் செய்கிறார்கள்.

மாநில அரசுகள் இத்தகைய ஆய்வை தன்னிச்சையாக நடத்தி, தங்கள் மாநிலத்தில் உள்ள நிலத்தடி நீர் குறித்த விவரங்களை சேகரிப்பதில் எந்தத் தடையும் இல்லை. மாநிலப் பொதுப்பணித் துறையின் ஒரு பிரிவான நீர் வளத் துறை இத்தகைய ஆய்வுகளை சில இடங்களில் செய்கிறது என்றாலும் முழுமையாக இதில் ஈடுபடுவதில்லை.

இந்தியாவில் நிலத்தின் மேற்பரப்பிலும் நிலத்தின் அடியிலும் உள்ள, பயன்பாட்டுக்கு உகந்த மொத்த நீரின் அளவு 1121 பில்லியன் கனமீட்டர். இதில் நிலத்தடி நீரின் அளவு 431 பில்லியன் கன மீட்டர். நிலத்தின் மேற்பரப்பில் உள்ள 1121 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் 60 முதல் 70 விழுக்காடு விவசாயத்துக்குப் பயன்படுகிறது. தேசிய ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு குழுமம் அளித்த அறிக்கை, இந்தியாவில் உள்ள வாய்க்கால்களை மேம்படுத்துவதாலும், நீர் மேலாண்மையை விவசாயிகள் கடைப்பிடிக்கச் செய்வதாலும் தற்போதைய பயன்பாட்டு அளவில் மேலும் 40% கூடுதலாக, தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த முடியும் என்கின்றது.

மேலதிகமான நிலத்தடி நீர் சுரண்டல் என்பது, நிலத்தடி நீரை மேலும் அதலபாதாளத்துக்குக் கொண்டு செல்கின்றது என்பதோடு, நீரின் தரத்தையும் குறைத்துவிடுகிறது. இந்தியா முழுவதிலும் நிலத்தடி நீர்ச் சுரண்டல் என்பது சராசரியாக 61% என்று மதிப்பிடுகிறார்கள். இது 2009-ஆம் ஆண்டுக் கணக்கு. கடந்த 3 ஆண்டுகளில் இந்த அளவானது மேலும் அதிகரித்திருக்கும். தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நிலத்தடி நீர்ச் சுரண்டல் 100% எனப்படுகிறது.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழ்நாட்டில் 457 கிணறுகளில் ஆய்வு நடத்தியதில் 348 கிணறுகளின் நிலத்தடி நீர், முன்பு இருந்த அளவைக் காட்டிலும் கீழே போயுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் பரவலாக மேலும் பல நூறு கிணறுகளில் ஆய்வுகளை நடத்தினால், நிலத்தடி நீர் இருப்பு இன்னமும் மோசமாகக் குறைந்து இருப்பது தெரியவரலாம்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலமாக நகர்வாழ் மக்களிடையே நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு தமிழக அரசு மேம்படுத்தியது. நிலத்தடி நீர்அளவு உயருவதற்கும் உதவியது. இருந்தும்கூட, நகர்ப்புறங்களின் அகோரப்பசிக்கு தீனிபோடும் அளவுக்கு நீலத்தடிநீர் அளவு உயரவில்லை என்பதே உண்மை.

மழையில்லாத காலங்களில் நிலத்தடி நீர் மட்டுமே மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும். ஆகவே, நிலத்தடி நீரை பயன்படுத்துவது குறித்து மிகத் தெளிவான சட்டங்கள் தேவையாக இருக்கின்றன.

"என் வீடு, என் நிலம், என் கிணறு, நான் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் எடுப்பேன்' என்று சொல்வது இனி சாத்தியமில்லை. "எத்தனை பேருக்காக, எந்தப் பயன்பாட்டுக்காக, எவ்வளவு தண்ணீர் எடுக்கிறோம்' என்று கணக்கு சொல்லியாக வேண்டிய கட்டாயம், கடப்பாடு இன்று நேர்ந்துள்ளது. நாடு தழுவிய அளவில் நீர்ச் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வான் பொய்த்தாலும் தான் பொய்யா நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாகச் சுரண்டினால், நிலமெனும் நல்லாள் நகும்.(நன்றி:தினமணி)

தேசிய நீர்க் கொள்கை - 2012 தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?பாகம் 3

வரி விலக்கால் அதிகரித்த நிதிப் பற்றாக்குறை!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாறுமாறாக 339 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணமல்ல. நிதிப் பற்றாக்குறையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அரசுக்கு வரும் வருவாயைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதே நிதிப் பற்றாக்குறையாகும். இப்போது மிக அதிகமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அபரிமிதமான நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டபோது ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளி இருக்கிறது என்பதுதான் உண்மை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை எந்த நிலையில், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 9 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறைக்கு அரசு ஆளாகியுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ.22.66 லட்சம் கோடி. முதல் 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையாக இருந்துள்ளது. அதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்தது.

2008-ல் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி உற்பத்தி மற்றும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மட்டுமல்ல, கூடவே வருவாய்ப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. முதல் இரண்டு பற்றாக்குறைகளும் அரசின் கவனக் குறையாலும், நிதி நிர்வாகத் திறமையின்மையாலும் ஏற்பட்டவை என்றால், வருவாய்ப் பற்றாக்குறை என்பது அரசு தெரிந்தே செய்த தவறு. விவரமுள்ள எந்த அரசும், நிதியமைச்சரும் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்.

வரிகள் குறைப்பு காரணமாக 5 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாக எகிறியது. முதல் 4 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 0.75 லட்சம் கோடியாக இருந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும், ரூபாயின் மதிப்புச் சரிவுக்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணி.

2008-ல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இப்போதும் சிறிதளவில் நடைமுறையில் உள்ளன. வரிகள் குறைப்பு என்பது நாட்டை கொள்ளையடித்தது என்பதுடன் மிக அதிகப்படியான நிதிப் பற்றாக்குறையையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் உண்டாக்கி, ரூபாயின் மதிப்பைச் சரித்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றனவே, அவர்களுக்கு மட்டுமே உதவியது.

ரூ.30 லட்சம் கோடி வருவாய் இழப்பு

ஆண்டுதோறும் பட்ஜெட்டின் பிற்சேர்க்கையில் வருவாய் இழப்பு குறித்த அறிக்கை இடம்பெறுகிறது. 2006-07 முதல் மத்திய அரசு வரி விலக்கு அளித்ததன் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த வரி விலக்கு ரூ.30 லட்சம் கோடி அளவுக்குச் சேர்ந்துள்ளது.

2008-ல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரி விலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தது. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் வரி விலக்கு இரு மடங்காக உயர்ந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்படும் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாகவும், வரி விலக்கு ரூ.25 லட்சம் கோடியாகவும் உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று காரணம் கூறப்பட்டது. அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேசப் பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது என்பது மன்மோகன் - சிதம்பரம் கூட்டணி முன்வைத்த வாதம்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்பைவிட இந்த "ஊக்குவிப்பு' காலகட்டத்தில்தான் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. 2005-06இல் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாக இருந்தது. அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிக அதிகமாக (9.5%) இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டோமானால், பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் 12.94% (2006-07) ஆகவும், 14.26% (2007-08) ஆகவும், 11.86% (2008-09) ஆகவும், 12.71% (2009-10) ஆகவும், 12.15% (2010-11) ஆகவும் அதிகரித்துள்ளது.

2005-06ஐ ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ.4.8 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனில் பெரும் பகுதியை பெரிய தொழில் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தவோ, பத்திரப்படுத்தவோ பயன்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழிப்பதற்குத்தான் பயன்பட்டன.

அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. 2008-09இல் 6.7 சதவீதமாகக் குறைந்தது. 2010-11 வரை சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர்தான் குறையத் தொடங்கியது. மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு அளித்தது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (பக்கம் 66-68) அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், வரி விலக்கு அளிப்பதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானதே என ஆலோசனையும் வழங்கியுள்ளது.

வரி விலக்குகளைத் திரும்பப் பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் 2005-லேயே உறுதி அளித்தனர். ஆனால், செய்யவில்லை. அப்போது அப்படிச் செய்யாததும், 2009-ல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாததுமே தவறான பொருளாதார நடவடிக்கைகளாக ஆகிவிட்டன.

ஊக்குவிப்பு வரி விலக்கு காரணமாக நிதிப் பற்றாக்குறை ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவும் 2011-12இல் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. மசோதா இப்போது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதன் மூலம், ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறையில் மேலும் ரூ.2 லட்சம் கோடி உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தேசமே திவாலானாலும் பரவாயில்லை, பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது என்ற எண்ணம் வர்த்தகச் சந்தையில் தோன்றியுள்ளது. நிலைமை இப்படி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடையாது?(நன்றி:- தினமணி)

Friday 30 August 2013

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 2

கச்சா எண்ணெய், தங்கம் மட்டுமே காரணமல்ல!
எப்படி நடப்புக் கணக்கில் உபரி பற்றாக்குறையானது என்பதையும், இறக்குமதி அதிகரித்து உற்பத்தி குறைந்தது என்பதையும் ஆட்சியில் இருக்கும் பொருளாதார மேதைகள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். அதற்கு இவர்கள் சொன்ன சமாதானம், சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலை.

தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் காரணமாகக் கூற முடியாது. ஏனென்றால், 2008-09இல் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-10இல் 8.6 சதவீதமாகவும், 2010-11இல் 9.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை முதலில் முதலீடுகளையும், பின்னரே உற்பத்தியையும் பாதிக்கும். முதலீடு சுருங்கிய பிறகுதான் உற்பத்தி வீழ்ச்சியடையும். ஆனால், இங்கு முதலீடு (மூலதனப் பொருள் இறக்குமதி) மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்தும், உற்பத்தி பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. இது என்ன புதிர்?

பிந்தைய 5 ஆண்டுகளில், மூலதனப் பொருள்களின் அதிகரித்த இறக்குமதிதான் தேசிய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறக்குமதி அதிகரித்ததால் உள்ளூர் மூலதனப் பொருள் தொழில் துறை சரிவைச் சந்தித்தது. 2009-10இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதமாக அதிகரித்தபோதும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லாமல் தொழில் துறை உற்பத்தி வெறும் 5.3 சதவீதம் அதிகரித்தது.

பின்னர் மூலதனப் பொருள் உற்பத்தி 2011-12இல் 4 சதவீதமும், 2012-13இல் 5.7 சதவீதமும் சரிவைக் கண்டது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இடைநிலைப் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள் தொழில் துறையை, மூலதனப் பொருள் இறக்குமதி சுனாமி போல தாக்கிய நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமெனப் பாய்ந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது (2001-04) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி வெறும் 600 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) டாலராக இருந்தது. ஆனால், 2004-05 முதல் 2012-13 வரை வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதி 8 மடங்கு அதிகரித்து சராசரியாக ஆண்டுக்கு 5.5 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலராக உயர்ந்தது.

இதே காலகட்டத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 மடங்கு உயர்ந்தது. இது தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்குதான். 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி 50 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வெறும் 2.3 பில்லியன் டாலராக இருந்தது. மூலதனப் பொருள் இறக்குமதி தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில் அழிக்கவே செய்தது. தேசிய உற்பத்தி அழிவுக்கு, தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியும் காரணமாக அமைந்தது.

உற்பத்தியை அழித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

வர்த்தக உபரி என்பது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும், வர்த்தகப் பற்றாக்குறை என்பது அதைக் குறைக்கும் என்பதும் அடிப்படைப் பொருளாதாரம் ஆகும். எனவே, வர்த்தகப் பற்றாக்குறையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம், அதே அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்தது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2007-08இல் 0.8 சதவீதமும், 1.5 சதவீதமும் (2008-09), 2.1 சதவீதமும் (2009-10), 1.4 சதவீதமும் (2010-11), 2.6 சதவீதமும் (2011-12), 3.9 சதவீதமும் (2012-13) குறைத்துள்ளது. ஒரு கணக்குக்காக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விலக்கிவிட்டால், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007-08இல் 10.8 சதவீதமாகவும் (9.3% அல்ல), 2008-09இல் 8.2 சதவீதமாகவும் (6.7% அல்ல), 2010-11இல் 10.7 சதவீதமாகவும் (8.6% அல்ல), 2011-12இல் 8.8 சதவீதமாகவும் (6.2% அல்ல), 2012-13இல் 8.9 சதவீதமாகவும் (5% அல்ல) இருந்திருக்கும்.

கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பை ஓரளவுக்கு விழுங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மூலதனப் பொருள்களுக்கும் இவற்றுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் உள்ளன.

சர்வதேச உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் அளவு தங்கத்தை இந்தியர்கள் வாங்குகிறார்கள். இந்தியாவின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான் பெட்ரோலியப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதி நான்கில் மூன்று பங்கை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. அது மட்டுமே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஏற்பதற்கில்லை.

ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்படும் இதர வெளிநாட்டுப் பொருள்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையில்லாமல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை மிக அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மன்மோகன் சிங் அரசு அனுமதித்ததால், உள்நாட்டு மூலதனப் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவையும் குறைத்துவிட்டது.

கச்சா எண்ணெய், தங்கம் காரணமல்ல!

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு கச்சா எண்ணெயும், தங்கமும் மட்டுமே காரணமல்ல அல்லது ஓரளவே காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 402 பில்லியன் டாலருக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பார்ப்பதற்கு இது பெரிய தொகை போலத் தோன்றலாம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் 251 பில்லியன் டாலர் மதிப்புக்கு நகைப் பொருள்களும், விலைமதிப்பற்ற கற்களும் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட தங்கமும், வைரம் போன்ற கற்களும் ஆபரணங்களாக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கின்றன. இதைக் கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 9 ஆண்டுகளில் 151 பில்லியன் டாலர்தான்.

அதேபோல, 9 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருள்கள் 804 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 279 பில்லியன் டாலரை கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 525 பில்லியன் டாலர் ஆகும். இது 587 பில்லியன் டாலர் மூலதனப் பொருள் இறக்குமதியைவிடக் குறைவானதே ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியின் நிகர மதிப்பு 360 பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் 407 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி தவிர்க்க முடியாதது, சரி. மூலதனப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி இருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது என்றும், உள்ளூர் உற்பத்தியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்தது என்றும் கூறுவதற்கு ஒரு ஞானி வேண்டுமா என்ன? சாதாரண மனிதனுக்குக்கூட தெரியும் இந்த உண்மை. பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா என்ன?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்படும் ஒரே ஒரு விளைவை மட்டும் பார்ப்போம். எண்ணெய் இறக்குமதிக்காக டாலரை வாங்குவதற்கு கூடுதலாகச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், இந்தியா எண்ணெய்க்காக செலவழிக்கும் தொகையை ரூ.9,500 கோடி அதிகரிக்கச் செய்துவிடும். இப்போதைய ரூபாய் மதிப்பினால், இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1.60 லட்சம் கோடி செலவழிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

பொருளாதாரச் சீரழிவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஒரு காரணம் மட்டுமே. (நன்றி தினமணி)

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1

பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.

2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில "நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.

ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!

சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் "தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.

2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், "இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?

2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்

2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.

1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?

2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.

கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.

உற்பத்தியை அழித்த இறக்குமதி

இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.

2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மூலதனப் பொருள்களின் இறக்குமதி "செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

79 சதவீதம் அதிகரிப்பு

மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.(நன்றி தினமணி)

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?

நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?

ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.

அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.




Thursday 29 August 2013

கோவில்பட்டியில் பரோட்டா எதிர்ப்பு பேரணி!

கோவில்பட்டியில் பரோட்டா எதிர்ப்பு பேரணி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் பசுமை இயக்கத்தின் சார்பில் பரோட்டா எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி 6 கி.மீ. தூரம் நடை பயணமாக சென்று புது அப்பனேரி கிராமத்தை அடைந்தது. ‘‘மைதா பொருட்களையும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பரோட்டாவையும் தவிர்ப்போம். இயற்கை உணவுப் பொருட்களான கம்பு, சோளம், தினை, காய்கறிகள் மற்றும் பழங்களை உண்போம்’’ என்று மாணவர்களும், ‘‘அபாயமான பரோட்டாவை தங்கள் குழந்தைகளுக்கு இனி கொடுப்பதில்லை’’ என்று பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்தனர்.

பேரணியின்போது, பரோட்டா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் எல்லா வீடுகளிலும் ஒட்டப்பட்டது. பேரணியின் இறுதியில், மெகா சைஸில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை குழி தோண்டி மூடினார்கள்.

இந்த பேரணி குறித்து பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் கூறும்போது, ‘‘பரோட்டா என்பது மைதாவினால் செய்யப்படும் ஒரு உணவாகும். 2 ஆம் உலகப் போரின்போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் அதிகமாக பயன்படுத்த தொடங்கப்பட்டது.

அதில் இருந்து பரோட்டாவும் பிரபலம் அடைந்தது. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் ‘பனசாயல் பெரோசிடே’ என்னும் ரசாயனத்தை சேர்த்து வெண்மை நிறமாக்கி செய்யப்படுவதே மைதா எனப்படுகிறது. இது தவிர ‘அலோக்கான்’ என்ற ரசாயனம் கலந்து மைதா மாவு மிருதுவாக்கப்படுகிறது.

கோதுமை தீட்டப்படும் போதே 76 சதவீத வைட்டமின்களும், தாது பொருட்களும் நீக்கப்படுகின்றன. அதோடு 97 சதவீத நார்ச்சத்தும் களையப்படுகிறது. மைதாவில் செய்யும் கேக், இனிப்பு பொருட்கள் மற்றும் பரோட்டா ஜீரணத்திற்கு ஏற்றது அல்ல. இதில் நார்ச்சத்து இல்லை, நார்ச்சத்து இல்லாத உணவுகள் ஜீரணிக்க காலதாமதமாகும்.

மைதாவை சாப்பிடுவதால் இருதய கோளாறுகள், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் ஏற்படும். கேரளாவில் மைதாவைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.(நன்றி:விகடன்)

புரோட்டா குறித்த எனது பதிவினை இங்கே பாருங்கள்

Wednesday 28 August 2013

மரபணு மாற்றப்பட்ட விதைகளையே விவசாயிகள் விரும்புகின்றனர்...அமைச்சரின் வக்காலத்து

மரபணு மாற்றப்பட்ட விதைகளையே விவசாயிகள் விரும்புகின்றனர்...

மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக விளைச்சல், அதிக லாபம் கிடைப்பதோடு மட்டுமன்றி இப்பயிர்களில் பூச்சித் தாக்குதலும் இல்லாததால் நம் நாட்டு விவசாயிகள் இவற்றைப் பயிரிடவே அதிகம் விரும்புவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை(27.08.2013) கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து, அவர் கூறியது:

நம் நாட்டில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. அதே வேளையில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் விளைவிக்கப்படுகிறது. கடந்த 2002-03ஆம் ஆண்டில் 0.38 சதவீத இடத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடப்பட்டு 86 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது. 2011-12ஆம் ஆண்டு 91.47 சதவீத இடத்தில் இப்பயிர் பயிரிடப்பட்டு 352 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது.

நமது விவசாயிகள், என்னை விட புத்திசாலிகளாக உள்ளனர். நமது நாட்டில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி அதிக அளவில் பயிரிடப்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாடு 46 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைந்து விட்டது. இதன்மூலம் நாட்டுக்கு அதிக அளவில் நன்மை கிடைத்துள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் அமெரிக்கா அதிக அளவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவித்து, அவற்றை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது. நம் நாட்டில் நிலவும் உணவு பாதுகாப்பு பிரச்னையைத் தீர்க்கும் காலம் வந்து விட்டது.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிரிட்டதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. இப்பருத்தியை பயிரிட்டதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரமாக விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

ஆந்திரம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்ய அனுமதித்துள்ளன.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு கட்டுப்பாடு விதிக்க விரும்பவில்லை. இந்தியா எப்போதுமே நம்பத்தகுந்த ஏற்றுமதியாளராக இருக்கவே விரும்புகிறது. இதனால் தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று சரத் பவார் தெரிவித்தார்.(நன்றி தினமணி)


என்ன சொல்ல இவரது கருத்துபற்றி..... நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு துணை போகிறார்கள்..

'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.பசுமைஅமைதி (கிரீன்பீஸ்) அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநந்தன், நாட்டில் நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவில் கத்தரிக்காய், கடுகு, நெல் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு களப் பரிசாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. களப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடங்கள், அந்தப் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, ஒவ்வாமைத்தன்மை அளவீடு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மறுஆய்வுக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி குறிப்பு போன்றவற்றை அளிக்குமாறு திவ்யா கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு எதிராக, மகாராஷ்டிரா கலப்பின விதை கழக நிறுவனம், மத்திய தகவல் கமிஷனுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் 2007 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதையும், மருந்துகள் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்வதும் பொது சுகாதாரத்துக்கு மிக முக்கியம். மனிதர்களிடம் அவை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய, களப் பரிசோதனை விவரங்கள் முக்கிய ஆதாரம். ஆனால் இந்த விவரங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. மறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'டிரிப்ஸ்' எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் 'வர்த்தக அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தத்தை' மீறி தகவல்களை வெளியிட முடியாது என்று மாஹிகோ நிறுவனம் கூறியுள்ளது.

''இந்தத் தகவல்களுக்கு ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டு விட்டதால், அவை வெளியிடப்படுவது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்று கூறுவது அப்பட்டமான பொய்'' என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். உணவு பாதுகாப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்றுதான் திவ்யாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது எந்த வகையிலும் வர்த்தக நலன்களை பாதிக்காது. பொது நலன் அடிப்படையில் மேற்கண்டது போன்ற தகவல்களை வெளியிடலாம் என்று தகவல் உரிமைச் சட்டம், டிரிப்ஸ் ஆகிய இரண்டின் கீழும் வழிவகை உண்டு.

ஆண்டாண்டுகாலமாக மறுவிவசாயத்திற்கு விதைகளினை சேமித்து வைத்து பழக்கப்பட்ட நமக்கு மான்சாண்டோ விதை நிறுவனத்திடம் விதைகள் வாங்கி பயன்படுத்தும் வகையில் மாற்றிவருகின்றனர்.

அன்று கிழக்கிந்திய கம்பேனிக்காக இராபர்ட் கிளைவ் இந்தியாவை அடிமைப்படுத்தினான்.ஆனால் இன்று பணத்திற்காக   மான்சாண்டோ போன்ற விதை நிறுவனத்திடம் நம்மை அடிமைப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முயற்சிக்கிறார்கள்.

நாம் நேரிடையாக இந்த சுதந்திரபோரில் பங்கு கொள்ளமுடியவில்லை எனினும் இணையம் மூலமாகவாவது நம் எதிர்ப்பினை பதிவு செய்வோமே..நம் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் கண்களினை திறக்கட்டுமே.

எதிர்ப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள்
இந்த போரில் பங்கு கொள்ள இங்கே சொடுக்குங்கள்
மேலும் விவரங்களுக்கு


மூலிகைச்செடிகள் பாகம்:-2

மூலிகைச்செடிகள் பாகம்:-2

துளசி:-


எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.


மருந்துக்கு உதவும் பாகங்கள்:-
இலை உள்ளிட்ட அனைத்து பாகங்களும்

கட்டுப்படும் நோய்கள்:-
ஜுரம்
மார்புச்சளி
ஜலதோஷம்
இருமல்
சிரங்கு
தோல் நோய்கள்
படை

வளர்க்கும் விதங்கள்:
விதைகள்


தூதுவளை:

இது வெப்பம் உண்டாக்கி, கபம் நீக்கி தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது.வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு.இது் ஊதாநி றப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி.: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.பயன் உள்ளது.இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.
தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும் .
காய் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்த்தரவு தீரும். பழம் இது மார்பில் இறுகிய சளியை நீக்கும்.இருமல் மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .

மருந்துக்கு உதவும் பாகங்கள்:

எல்லாபாகங்களும்

கட்டுப்படும் நோய்கள்:

இருமல்,சளி,ஆஸ்துமா போன்ற நோய்கள்

வளர்க்கும் விதம்:-

விதை,குச்சி


கற்பூரவள்ளி:-

துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லியின் மற்றொரு பெயர் ஒமவல்லி.
பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.

மருந்துக்கு உதவும் பாகம்:

இலை,வேர்

கட்டுப்படும் நோய்கள்:

குழந்தைகளுக்கு வரும் மாந்தம்
இருமல்
சளி
தொண்டை சதை வளர்ச்சி

வளர்க்கும் விதம்

முற்றிய தண்டு





Sunday 18 August 2013

மூலிகைசெடிகள் பாகம்-1

மூலிகைசெடிகள் 

சோற்றுக்கற்றாழை:


இயற்கை நமக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் சோற்றுக் கற்றாழையும் ஒன்று. எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு, மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ வைட்டமின்கள் அதிகம். அழகாக வெளிநாட்டிலிருந்து பேக்கிங்காக ஆலோவீரா என்ற பெயருடன் விற்பனைப்படுத்தப்படும் இந்த சோற்றுக்கற்றாழையினை முகப்பொலிவிற்காக பயன்படுத்திவருகின்றோம்.இன்னும் ஆலோவீரா ஜெல்,ஆலோவீரா மருந்து என பலவகைகளில் கிடைக்கிறது.சோற்றுக்கற்றாழையில் மேலும் கால்சியம், மெகனீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம்,சிங்க் போன்ற உடலுக்கு இன்றியையாத தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன. சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது. இதை ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.


மருந்துக்கு உதவும் பாகம்:

   பசுமையான சதைப்பற்று

கட்டுப்படும் நோய்கள்

மூலவியாதிகள்
வயிற்றுப்புண்
மேகநோய்கள்
தீப்பட்ட புண்
கண்நோய்கள்
தோல்பிணிகள்

வளர்க்கும் விதம்:-

சிறு செடிகளினை நட்டு வைத்தல்

நெல்லி:
நெல்லியின் இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும் பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60 வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.

மருந்துக்கு உதவும் பாகம்:

பழம்

கட்டுப்படும் நோய்கள்

நீரிழிவு நோய்
மேகநோய்
நோய் எதிப்புத்திறனை உடலுக்குத்தரும்

வளர்க்கும் விதம்:-

விதைகள்,ஒட்டு முறை

செம்பரத்தை:-

செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது


மருந்துக்கு உதவும் பாகம்:

பூ,இலை

கட்டுப்படும் நோய்கள்

வெள்ளை நோய்கள்,
உடற்சூடு,
தலை முடி பிரச்சனைகள்

வளர்க்கும் விதம்:-

குச்சிகள்


Tuesday 13 August 2013

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்



         நன்றி: கிரீன் பீஸ் இந்தியா அமைப்பு

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 ஐ எதிர்த்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி (வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்த நாள்) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்ட  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாள் முழுதும் நடைபெற்ற இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 20 மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.பாராளுமன்றம் நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013ஐ திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இந்திய பருத்தியால் நெய்யப்பட்ட இந்திய தேசியகொடி இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது சிறப்பு.பேரணி முடிவில் இந்திய பருத்தியால் நெய்யப்பட்ட இந்திய தேசியக்கொடி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15இல் பட்டொளி வீசி பறக்க விட திரு நாராயணசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது இம்மாதிரியான கறுப்புச்சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.

காலம்காலமாக பயிரிட்டு மறு விதைப்பிற்கென விதைகளினை எடுத்துவைத்து பயன்படுத்திவந்த நம்மை, விதைகளினை மரபணு மாற்றப்பட்ட விதைகளினை மான்சாண்டோ போன்ற விதை உற்பத்தியாளர்களிடம் வாங்கும் வகையில் அவர்களினை பலப்படுத்தும் வகையில் விதை உற்பத்தியாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வியாபார தந்திரம் தான் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013.

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு  பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளது.சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக மாநில மொழிகளில் கருத்தாய்வு மேற்கொள்ளவும் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறவும் ஜூலை 10 கடைசி தேதி என இருந்தது ஆகஸ்ட் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 இல் டெல்லியில் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013க்கு எதிராக உள்ளோம் என்பதினை அரசுக்குத்தெரிவிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி முழக்கம் இட்டு உள்ளனர்.நாம் நேரிடையாக இந்த சுதந்திரபோரில் பங்கு கொள்ளமுடியவில்லை எனினும் இணையம் மூலமாகவாவது நம் எதிர்ப்பினை பதிவு செய்வோமே..நம் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் கண்களினை திறக்கட்டுமே.


எதிர்ப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள்

இந்த போராட்டத்தில் இணைய இங்கே சொடுக்குங்கள்

மேலும் விவரங்களுக்கு

  1. Thousands demand BRAI bill be withdrawn, India be GMO free, Deccan Chronicle, Aug 11, 2013.
    http://www.deccanchronicle.com/130811/news-current-affairs/article/thousands-demand-brai-bill-be-withdrawn-india-be-gmo-free
  2. Farmers demand hoisting of non-Bt cotton flag on Independence Day, TOI, Aug 8, 2013.
    http://articles.timesofindia.indiatimes.com/2013-08-08/delhi/41201028_1_cotton-production-brai-bill-kavitha-kuruganti
  3. Biotechnology Bill: deadline for public feedback extended, Down to Earth, July 10, 2013.
    http://www.downtoearth.org.in/content/biotechnology-bill-deadline-public-feedback-extended

தாவர பூச்சி விரட்டிகள்-வேம்புக்கரைசல்

தாவர பூச்சி விரட்டிகள்-வேம்புக்கரைசல்


வேம்புக்கரைசல்:-1


தேவையான பொருள்கள்:

வேப்பிலை -6 கிலோ

செய்முறை:

6கிலோ வேப்பிலையை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும்,காலையில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அரைக்கப்பட்ட வேப்பிலையுடன் 60 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.

வேம்புக்கரைசல்:-2

தேவையான பொருள்கள்:

வேப்பிலை -ஓடு நீக்கிய வேப்பம் விதை :-3 கிலோ

செய்முறை:

3கிலோ வேப்பம் விதையினை அரைத்து  இரவு முழுவதும்  ஊற வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:-

அரைக்கப்பட்ட வேப்பம் விதையுடன் 60 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.

வேம்புக்கரைசல்:-3

தேவையான பொருள்கள்:

வேப்பம் புண்ணாக்கு:- 6 கிலோ

செய்முறை:

6 கிலோ வேப்பம் புண்ணாக்கினை அரைத்து  இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:-

அரைக்கப்பட்ட வேப்பம் புண்ணாக்குடன்  60 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.

வேம்புக்கரைசல்:-4

தேவையான பொருள்கள்:

வேப்பம் எண்ணைய்:- 3 லிட்டர்

பயன்படுத்தும் முறை:-

3 லிட்டர் வேப்பம் எண்ணையுடன் 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கவும்.இந்த கரைசல் தயாரித்த உடன் தெளிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்:

ஆசியச்சோளவண்டு
கருப்புத்தரைவண்டு
பழுப்பு அசுவினி
முட்டைகோஸ் அசுவினி
முட்டைக்கோஸ் வெள்ளை வண்ணத்துப்பூச்சி
ஆமணைக்கு படைப்புழு
எலுமிச்சை இலைத்துளைப்பான்
எலுமிச்சை தண்டுப்பூச்சி
எலுமிச்சை சிகப்பு சிலந்தி
பருத்திகாய்ப்புழு
படைப்புழு,
ஜெர்மன் கரப்பான்பூச்சி
பச்சை அசுவினி
முட்டைக்கோஸ் புழு
பாலைவன வெட்டுக்கிளி
இளஞ்சிகப்பு காய்ப்புழு
நெல்பச்சைத்தத்துப்பூச்சி
நெல்தண்டுதுளைப்பான்


  • எல்லாவகைத்தாவரபூச்சி விரட்டிகளினையும் பருத்தி துணிகொண்டு வடிகட்டிய பினனர் ஒரு லிட்டருக்கு 4கிராம் வீதம் காதிசோப் கரைசல் சேர்த்து தெளிக்கவேண்டும்.
  • தாவரபூச்சி விரட்டிகளினை காலை சூரியோதயத்திற்கு முன்பும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் தெளித்தல் அதிக பலனளிக்கும்.
  • தெளிக்கவேண்டிய பயிர் அளவிற்கு தக்கவாறு கரைசல்கள் தயாரிப்பதும் அதனை தெளிப்பதும் செய்யலாம்
  • செடிகளினை நடும் போதே வேப்பம் புண்ணாக்கு இட்டு நட்டால் பூச்சிதாக்குதல் குறையும்.
  • பக்கவிளைவில்லாதது.செலவும் குறைவு ,பலன் அதிகம்.




Monday 12 August 2013

இயற்கை வேளாண்மை-தாவர பூச்சிவிரட்டிகள்

தாவர பூச்சிவிரட்டிகள்-பூண்டு கரைசல்

தயாரிக்கும் முறை:-

தேவைப்படும் பொருள்கள்:
 
              பூண்டு           :- 300 கிராம்
மண்ணெண்ணெய்: -150 மில்லி

    பூண்டை இலேசாக அரைத்து மண்ணெண்ணெயில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.


பயன்படுத்தும் முறை:-

ஊற வைக்கப்பட்ட கரைசலுடன் 60 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்கலாம்.

கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்:

பருத்திக்காய்த்துளைப்பான்,
அசுவினி
படைப்புழு
பருத்தி சிகப்பு பூச்சி
நெல் செம்புள்ளி நோய்
கொலராடா வண்டுகள்
பால்ஸ் காட்லிங் அந்துப்பூச்சி
வீட்டு ஈ
முட்டைக்கோஸ் புழு
ஜப்பானிய வேர்முடிச்சு புழு
காப்ரா வண்டுகள்
மெக்ஸிகன் அவரை வண்டு
சிகப்பு சிலந்தி
கொசு
வெங்காய இலைப்பேன்
பழவகைகளினை தாக்கும் வண்டுகள்,புழுக்கள்
பயிர் வண்டு,
வேர்முடிச்சு புழு
உண்ணிகள்
வெள்ளை ஈ
கம்பிப்புழு
உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி
கரும்பு குறுத்துப்புழு

பலன்கள்:

பக்க விளைவுகள் இல்லாதது,இயற்கை பூச்சி விரட்டி,மாசற்ற விவசாயத்திற்கு ஏற்றது.செலவு குறைவு பலன்கள் அதிகம்




Wednesday 7 August 2013

எங்கள் வீட்டு வீட்டுத்தோட்டம்

    என்னுடைய முதல் பதிவில் வீட்டுத்தோட்டம் என்ற தலைப்பில் வீட்டில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட தோட்டம் குறித்து கருத்துரைத்து இருந்தேன்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் ஆனால் செயல்படுத்துவதில்தான் கடினம்.கருத்துரைத்த நான் செய்யாமல் இருக்கலாமா?அதான் எங்கள் வீட்டின் மீது தோட்டம் அமைத்தேன்.கீரைகள்,தக்காளி,வெண்டை,மிளகாய்,கேரட்,பீட்ரூட்,முள்ளங்கி,ஆகியன விதைத்தேன்.எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?நாள் தோறும் வளரும் விதங்களினை ரசித்தேன்.ஒவ்வொரு இலை விடும் போதும் சந்தோசத்தில் மனம் துள்ளியது.முதன் முறையாக GROW BAG  எனப்படும் பையில் அரைகீரை நட்டு அது வளர்ந்து அதனை அறுவடை செய்து சமைத்து உண்டேன்.எவ்வளவு இனிமை தெரியுமா?இன்று தண்டு கீரை அறுவடை செய்து சமைத்து உண்டோம்.மாசற்ற பயிர்.மட்டற்ற மகிழ்ச்சி.வெண்டை பூத்துள்ளது.ரசிக்கின்றேன்.,ருசிக்க தயராக உள்ளேன்.

பயன்படாத வாளியில் ரோஸ் செடி நட்டுள்ளேன்.பூக்க தயாராக உள்ளது.மேலும் சிறு சிறு பூச்செடிகள்,பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்துள்ளேன்.

GROW BAG  எனப்படும் செடி வளரும் பைகள் சேலத்திலிருந்து வாங்கினேன்.3 வருடத்திற்கும் மேல் உழைக்கும்.பயன்படுத்துதல் சுலபம்,பிளாஸ்டிக் தொட்டிகள்,மண்தொட்டிகள் போன்றவற்றிற்கு மாற்றாக இதனை பயன்படுத்தினேன்.மேலும் பயன்படாத தண்ணீர்கேன்களினை வெட்டி மண் நிரப்பி பூச்செடிகள் நட்டுள்ளேன்.

எங்கள் வீட்டு காய்கறித்தேவையினை சிறிது சிறிதாக இதன் மூலமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன்.
பைகளில் விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றது

பைகளில் கீரை விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றது

பைகளில் தண்டுக்கீரை விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றது

வெந்தயக்கீரை

காய்கறி செடி வகைகள்

அனைத்தும் ஒரே இடத்தில்

மிளகாய்,சீனி அவரை,பீட்ரூட்,பாகல்

பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் பூச்செடி

பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் பூச்செடி

பிளாஸ்டிக்பாட்டிலில் மணிபிளாண்ட்

பிளாஸ்டிக்பாட்டிலில் மணிபிளாண்ட்

உடைந்த பிளாஸ்டிக் டிரேவில் வெண்டை

உடைந்த பிளாஸ்டிக் டிரேவில் வெண்டை பூக்க துவங்கியுள்ளது

பூச்செடிகள்

பயன்படாத வாளியில் ரோஸ் செடி

முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட கீரை

முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட கீரை
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.


ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார் என்ற வள்ளுவரின் வாக்கின் படி செய்ய வேண்டும் என எண்ணினால் அதனை செய்ய இயலும்.


மரம் நடலாம் வாருங்கள்.....

மரம் நடுவோம் மழை பெறுவோம்

எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்.


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று.ஆனால் மரம் நடுகின்றோமா என்றால் இல்லை.

இன்றே மரம் நடுவோம்.அதற்கு சில எளிய வழிமுறைகள்...

விதைப்பண்ணைகளுக்கு சென்று மரமாக வளரும் விதைகளினை வாங்கி அதனை நாம் செல்லும் வழியில் சாலையின் இரு மருங்கிலும் வீசி செல்வோம்.குழி பறிக்கவோ அல்லது நடவோ மெனக்கெட வேண்டாம்.அதனை இயற்கையே பார்த்துக்கொள்ளும்.

புளியமர விதைகள்,வேப்ப விதைகள் எளிதாக கிடைக்கும்.அதனை எளிதாக சேகரிக்கலாம்.அப்படி சேகரிக்கப்பட்ட விதைகளினை நாம் அன்றாடம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே தூவிச்செல்லலாம்.அதன் வளர்ச்சியினை நாம் கண்முன்னே காணலாம்.

நமது பிறந்த நாளிற்கு சாக்லேட்,கேக் என செலவு செய்வதற்கு பதில் மரக்கன்றுகளினை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்து சாலை ஓரங்களில் நடசெய்யலாம்.நாமும் நடலாம்.ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு விதமான மரக்கன்றுகள் வழங்கலாம்.

பறவையினங்கள் பழங்களினை தின்று அப்படியே விட்டுச்செல்லும் கொட்டைகள் முளைக்கும் போது நம்மால் வீசி எறியக்கூடிய விதைகள் முளைக்காதா?

குழி வெட்டி விதை போட்டு மூடி தண்ணீர் விட்டுத்தான் மரம் வளர்க்கவேண்டும் என்பதில்லை.விதை போட்டாலே போதும்.தற்போது மழை பெய்து வருவதால் மற்ற விசயங்களினை இயற்கைசெய்து கொள்ளும்.

நம்கைகளில்தான் மரம் வளர்ப்பு இருக்கிறது.இன்றே ஆரம்பிப்போமா..

Tuesday 6 August 2013

மரம்...மழை....விளம்பரம்....

மரம்...மழை....விளம்பரம்....

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .இந்த வாக்கியம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?இதென்ன கேள்வி என்கின்றீர்களா?இருக்கின்றது.மரம் வளர்ப்போம்.இலவசமாக விளம்பரம் செய்வோம்.என்பது புது மொழி.

பண்டையகால அரசர்கள் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு சாலையில் செல்வோருக்கு வெயிலின் கொடுமை இருக்கக்கூடாது என கருதினர்.அது அக்காலகட்டத்திற்கு உதவியது என்றால் வாகன வசதிகள் பெருகி பல்வேறு வகையான வாகனங்கள் புகையினை கக்கி சுற்றுச்சூழலினை மாசுபடுத்தும்போது சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரங்கள் அந்த கார்பன் டை ஆக்சைடினை அதாவது கரியமில வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தி நமக்கு உதவுகிறது.இதனை அறிந்தோ அறியாமலோ சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு வளர்த்தார்கள்.ஆனால் இன்று நான்கு வழிப்பாதை ஆறுவழிப்பாதை என அவ்வாறு வளர்த்த மரங்களினை வெட்டி சாலைகளினை அகலப்படுத்துகின்றோம்.

நான்கு வழிப்பாதைகளில் செல்வோர் கவனித்து இருக்கலாம்.இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்த மரங்கள் இல்லாததினை.

இருப்பினும் ரோட்டின் நடுவே செவ்வரளி எனப்படும் செடி வகைகளினை நட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள்.ஏன் செவ்வரளி நடப்பட்டுள்ளது தெரியுமா? அது அதிகளவில் கரியமில வாயுவினை எடுத்துக்கொள்ளும்.அதனாலேதான் செவ்வரளி நடப்பட்டுள்ளது.


தற்போது சில இடங்களில் சில ரோட்டோரங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது.ஆனால் அதனை நாம் விளம்பரப்படுத்தும் பலகையாக,ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கான அறிவிப்பினை மறைக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றோம்.இது எந்த அடிப்படையில் நியாயம்.விளம்பரம் செய்ய கட்டுப்பாடு ஏதும் வேண்டாமா? விளம்பரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களினை என்ன செய்வது? சமூக பொறுப்புணர்வு வேண்டாமா?மரங்களினை காயப்படுத்துவது சரியா?எத்தனை பொத்தல்கள்?எத்தனை ஆணிகள்?
நல்லவேளை ரிப்ளெக்டர் மறைக்கப்படவில்லை

எத்தனை ஆணிகள் 

மரம் சிறியதானதால் இரண்டு மட்டுமே

ஆணி விற்பனைக்கு

வரிசையாக அனைத்து மரங்களிலும் 


ஒரே மரத்தில் பல்வேறு விளம்பரங்கள்

மரம் ஒன்று பயன் மூன்று
திருந்துவோமா?