Sunday 8 December 2013

மண் வளம் மேம்பட ....

மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.

1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

பலபயிர் வளர்ப்பு:-

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன

தானியப்பயிர் :
 
சோளம்              :-                   1 கிலோ
கம்பு                     :-                  1/2 கிலோ
தினை                  :-                 1/4 கிலோ
சாமை                 :-                  1/4 கிலோ

பயிறு வகை :

உளுந்து                                   :- 1 கிலோ
பாசிப்பயறு                            :- 1 கிலோ
தட்டைப்பயிறு                     :- 1 கிலோ
கொண்டைக்கடலை         :-1 கிலோ

பசுந்தாள் பயிர்கள் :
 
தக்கை பூண்டு                      :- 2 கிலோ
சணப்பை                                :- 2 கிலோ
நரிப்பயறு                               :- 1/2 கிலோ
கொள்ளு                                 :- 1 கிலோ

மணப்பயிர்கள்:-

கடுகு                                       :-1/2 கிலோ
வெந்தயம்                             :-1/4 கிலோ
சீரகம்                                      :-1/4 கிலோ
கொத்தமல்லி                      :- 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு உண்டானது.

No comments:

Post a Comment