Sunday 20 October 2013

மூலிகைச்செடிகள் பாகம் 4

மூலிகைச்செடிகள் பாகம் 4:-

மாதுளை:-

வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம் மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும்,சர்க்கரையும் மிகுந்த பழம்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.அடர் சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளை, பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் மாதுளையில் 12 முதல் 16 சதவீதம் வரை சர்க்கரைச்சத்து உள்ளது.

மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. உடம்பில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கிறது. எனவே வெயிலில் அலைபவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளலாம்.

மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=78%
மாவுப்பொருள்=15%
புரதம்=1.7%
கொழுப்பு=0.1%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.07%
இரும்புத்தாது=0.03 யூனிட்
வைட்டமின் C=16 யூனிட்
வைட்டமின் B2=10 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் மாதுளை பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.

வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு. மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு. குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.

இதயம் வலிமை அடையும். ஹீமோகுளோபினைக் கூட்டும் உயர்ந்த சாறு. வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது. 

இருமலைத் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதன் தோலையும், கிராம்பையும் சேர்த்து கஷாயம் செய்து உட்கொள்ளக் கொடுக்க, சீதபேதி குணமடையும்.

தொண்டைப்புண் உள்ளவர்கள் இந்த பழத்தின் சாறுடன் சிறிது படிகாரம் சேர்த்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் நாடாப்புழு இருந்தால் மாதுளை மரப்பட்டையுடன் கிராம்பு கலந்து கஷாயம் வைத்து குடிக்க புழுக்கள் இறந்து விடும்.

மார்புச்சளி உள்ளவர்கள் மாதுளைப்பூவைக் காய வைத்து, இடித்து, பொடியாக்கி நாலைந்து அரிசி எடை அளவு சாப்பிட்டு வர சளி கரையும்.
மேலும் வாந்தி, விக்கல், கருப்பையில் உள்ள புண்கள், மயக்கம், அல்சர் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக அமைகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மருந்துக்கு உதவும் பாகம்:-

பழம்,பழ ஓடு,பிஞ்சு

வளர்க்கும் விதம்:-

விதை,குச்சி


No comments:

Post a Comment